
<p style="text-align: justify;"><strong>கடலூர்: </strong>அரசுப் பள்ளிகளில் கடந்த 16 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, வீட்டு வசதித்துறை அமைச்சர் ராஜ்குமாரிடம் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இக்கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
<h3 style="text-align: justify;">16 ஆண்டுகாலக் காத்திருப்பு: பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை</h3>
<p style="text-align: justify;">தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கைக்கல்வி ஆகிய சிறப்புப் பாடங்களைக் கற்பிப்பதற்காகப் கடந்த 2012-ம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்கள் 5000 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் நியமிக்கப்பட்டனர். 16 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது ரூ.15,000 மட்டுமே தொகுப்பூதியமாகப் பெற்றுக்கொண்டு மிகக் குறைந்த ஊதியத்தில் இவர்கள் தங்களது சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">கடந்த காலங்களில் ஆண்ட கட்சிகள் தேர்தல் சமயத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில், "அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்" என்ற முக்கியமான அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. இருப்பினும், தங்களது கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதையும் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> தேர்தல் வாக்குறுதியை சுட்டி காட்டி பகுதிநேர ஆசிரியர்கள், உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.</p>
<h3 style="text-align: justify;">கடலூரில் அமைச்சரிடம் நேரில் மனு</h3>
<p style="text-align: justify;">இந்நிலையில், கடலூருக்கு வருகை தந்த வீட்டு வசதித்துறை அமைச்சர் ராஜ்குமாரை, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் தலைமையில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் தண்டபாணி, <a title="பாக்யராஜ்" href="https://tamil.abplive.com/topic/bhagyaraj" data-type="interlinkingkeywords">பாக்யராஜ்</a>, ராஜேஷ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அப்போது, தங்களது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய விரிவான மனுவை அமைச்சரிடம் அவர்கள் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைப்பதாக உறுதியளித்தார்.</p>
<h3 style="text-align: justify;">மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள்</h3>
<p style="text-align: justify;"><strong>பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு:</strong> வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி புதிய அரசின் முதலாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையிலேயே 11,773 பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுமாறு முதலமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும்.</p>
<p style="text-align: justify;"><strong>வாக்குறுதியை நிறைவேற்றக் கோரிக்கை:</strong> தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, 5 ஆண்டுகள் பண நிறைவு செய்த தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கையை உடனே தொடங்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;"><strong>11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்:</strong> உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் துறைகளில் 16 ஆண்டுகள் கடந்து தற்போது ரூ.15,000 குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 11,773 ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாகப் பணி நிரந்தர அரசாணை (G.O.) வெளியிடப்பட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">தீவிரமடையும் போராட்டப் பாதை</p>
<p style="text-align: justify;">தங்களது கோரிக்கை தொடர்பாக ஆசிரியர்கள் அமைப்பினர் ஏற்கனவே முதலமைச்சர் அலுவலகம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நிதியமைச்சர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தொடர்ச்சியாகப் பல கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர்.<br />இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், "நாங்கள் கடந்த 16 ஆண்டுகளாகக் மிகக் குறைந்த தொகுப்பூதியத்தில் மன உளைச்சலுடனும், பொருளாதார நெருக்குதலையுமே சந்தித்து வருகிறோம். எங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்காகவே அர்ப்பணித்துவிட்டோம். தேர்தல் வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். வரும் ஆகஸ்ட் 5 பட்ஜெட்டில் இதற்கான நல்லறிவிப்பு வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் எனத் தெரிவித்தார். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதில் மிக முக்கியப் பங்காற்றும் சிறப்புப் பகுதிநேர ஆசிரியர்களின் 16 ஆண்டுகாலக் கோரிக்கைக்கு வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்வு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.</p>
Source: Read Full Article