
<p style="text-align: justify;"><strong>சென்னை:</strong> "ரயிலில் பயணம் செய்யலாம்... உணவும் பாதுகாப்பாக இருக்கும்" என்ற நம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், மைசூருவில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் விரைவு ரயிலில் வழங்கப்பட்ட மசால் வடையில் 'ஃபெவி க்விக்' ( பேனர் ஒட்டும் பசை) இருந்ததாக எழுந்த புகார் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">"வடையிலேயே ஃபெவி க்விக் இருந்தால், சாப்பாட்டில் இன்னும் என்ன இருக்கும்?" என்ற கேள்வியை பலரும் வேதனையுடன் எழுப்பியுள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த சம்பவம் வேகமாக பரவி, ரயில்வே உணவின் தரம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/27/9573f07a52db95f6066848ae6ac55e741785157123849733_original.jpg" /></p>
<p style="text-align: justify;"><strong>மைசூருவில் இருந்து சென்னைக்கு வந்த போது ஏற்பட்ட ஷாக் </strong></p>
<p style="text-align: justify;">சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சேகர், லயன்ஸ் கிளப் அமைப்பைச் சேர்ந்த 150 பேருடன் மைசூருவுக்கு சுற்றுலா சென்று, பின்னர் வந்தே பாரத் விரைவு ரயிலில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். இந்த ரயிலில் உணவு மற்றும் சிற்றுண்டி வசதிக்காக தலா ரூ.1,400 கட்டணம் செலுத்தியிருந்தனர். மதியம் சுமார் 3 மணியளவில் ரயிலில் பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதில் மசால் வடை, தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன.</p>
<p style="text-align: justify;"><strong>வடையைப் பிரித்ததும் காத்திருந்த அதிர்ச்சி</strong></p>
<p style="text-align: justify;">இந்நிலையில் சேகர் தனது உணவு பார்சலில் இருந்த மசால் வடையை சாப்பிடுவதற்காக முயற்சி செய்துள்ளார். அப்போது வடையின் உள்ளே சிறிய 'ஃபெவி க்விக்' பசை டியூப் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். அதிர்ச்சியில் உறைந்த அவர், உடனடியாக அருகில் இருந்த லயன்ஸ் கிளப் உறுப்பினர்களிடம் அதைக் காட்டினார். வடைக்குள் பசை டியூப் இருப்பதை பார்த்து மற்ற பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். "நல்லவேளை சாப்பிடுவதற்கு முன்பே பார்த்துவிட்டோம். தெரியாமல் சாப்பிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?" என்ற அச்சமும் பயணிகளிடம் எழுந்தது.</p>
<p style="text-align: justify;"><strong>சிற்றுண்டியை திருப்பிக் கொடுத்த பயணிகள்</strong></p>
<p style="text-align: justify;">இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டியை உடனடியாக திருப்பி ஒப்படைத்தனர். மேலும், உணவு தயாரித்து வழங்கிய கேட்டரிங் ஒப்பந்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் ரயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>
<p style="text-align: justify;"><strong>ரயில்வே அதிகாரிகளின் சமரசம்</strong></p>
<p style="text-align: justify;">இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில் மேலாளர் விரைந்து வந்து சேகர் உட்பட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் ரயிலுக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், சேகரிடம் இருந்து எழுத்துப்பூர்வமான புகாரை பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட கேட்டரிங் ஒப்பந்த நிறுவனம் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பிறகே பயணிகள் அமைதியடைந்தனர்.</p>
<p style="text-align: justify;"><strong>"இது சாதாரண தவறாங்க... உயிரை பறிக்கும் அபாயம் "</strong></p>
<p style="text-align: justify;">இதுகுறித்து சேகர் கூறுகையில், இந்த சம்பவத்தில் இருந்து நான் இன்னும் மீளவே இல்லை. வந்தே பாரத் ரயிலில் ஐஆர்சிடிசி அனுமதி பெற்ற ஒப்பந்த நிறுவனம்தான் உணவு மற்றும் சிற்றுண்டிகளை தயாரித்து வழங்குகிறது. பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதற்கேற்ற தரம் உணவில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஒரு வடைக்குள் 'ஃபெவி க்விக்' டியூப் இருப்பது என்பது சாதாரண அலட்சியம் அல்ல. இது உணவு பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் சம்பவம். குழந்தைகள் அல்லது முதியவர்கள் இதை கவனிக்காமல் சாப்பிட்டிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம். எனவே, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், ரயில்வே நிர்வாகம் உணவின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என்றார்.</p>
<p style="text-align: justify;"><strong>பயணிகள் எழுப்பும் கேள்வி</strong></p>
<p style="text-align: justify;">இந்த சம்பவத்திற்குப் பிறகு, ரயில்வே உணவு பாதுகாப்பு குறித்து பயணிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். உணவு தயாரிக்கும் இடங்களில் தரக் கட்டுப்பாடு சரியாக உள்ளதா? தயாரிக்கப்பட்ட உணவுகள் விநியோகிக்கப்படுவதற்கு முன் பரிசோதிக்கப்படுகிறதா? பயணிகள் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்ற தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்ற கேள்விகளுக்கு ரயில்வே நிர்வாகம் பதிலளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>உணவு பாதுகாப்பில் சமரசம் கூடாது</strong></p>
<p style="text-align: justify;">வந்தே பாரத் போன்ற பிரீமியம் ரயில்களில் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்கின்றனர். வேகம், வசதி மட்டுமல்ல, பாதுகாப்பான மற்றும் தரமான உணவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் பலர் இந்த சேவையை தேர்வு செய்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">அந்த நிலையில், ஒரு மசால் வடைக்குள் 'ஃபெவி க்விக்' இருப்பதாக எழுந்துள்ள புகார், உணவு தயாரிப்பு மற்றும் தரக் கண்காணிப்பு முறைகள் குறித்து கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">"வடையில் ஃபெவி க்விக் இருந்தால்... சாப்பாட்டில் இன்னும் என்ன இருக்கும்?" என்ற வேதனையும் கலந்த கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் மீண்டும் நடைபெறாத வகையில், உணவு தயாரிப்பு முதல் விநியோகம் வரை அனைத்து கட்டங்களிலும் ரயில்வே நிர்வாகம் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதே பயணிகளின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. </p>
Source: Read Full Article