
<p>புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக இலங்கைக்கு மருந்து கடத்தப்பட்டதும் தெரியவந்தது.</p>
<p>புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய அளவில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்டு, அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது மேட்டுப்பாளையம் பகுதியில் மற்றொரு போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு மருந்துகள் கடத்த முயன்றதும் அம்பலமாகியுள்ளது.</p>
<h2>ராமேஸ்வரத்தில் சிக்கிய மருந்து கடத்தல்:</h2>
<p>கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் கடலோர காவல் படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சென்ற ஒரு படகை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் பெருமளவிலான மருந்துகள் இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.</p>
<p>உடனடியாக அந்த மருந்துகளை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர், மாத்திரைகளின் அட்டையில் இருந்த முகவரியைக் கொண்டு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தனர். ஆனால், அந்த நிறுவனம் தாங்கள் இலங்கைக்கு எந்த மருந்தையும் அனுப்பவில்லை என்றும், பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் தங்களுடைய தயாரிப்பே இல்லை, அவை போலியானவை என்றும் அதிர்ச்சி தகவலை அளித்தது.</p>
<h2>புதுச்சேரி தொழிற்சாலையில் அதிரடி சோதனை:</h2>
<p>இதனைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் நடத்திய தீவிர விசாரணையில், இந்த போலி வலி நிவாரணி மாத்திரைகள் புதுச்சேரி, மேட்டுப்பாளையம் குருமாம்பேட்டில் உள்ள ஒரு மருந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்தத் தகவலை உடனடியாக புதுச்சேரி போலீஸாருக்கு அவர்கள் தெரிவித்தனர்.</p>
<p>தகவலின் அடிப்படையில், புதுச்சேரி போலீஸார் மேட்டுப்பாளையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட மருந்து தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அங்கு சட்டவிரோதமாக போலியாக தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை போலீஸார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.</p>
<h2>தொழிற்சாலை உரிமையாளர் கைது:</h2>
<p>போலி மருந்து தொழிற்சாலையை நடத்தி வந்த உரிமையாளரான சண்முகாபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் பகுதியில் இந்த மருந்து தொழிற்சாலையை நடத்தி வருவதும், இந்த நிறுவனத்தில் வேறு சில மருந்துகளும் தயாரிக்கப்பட்டு வருவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>
<h2>போலீஸார் மற்றும் அதிகாரிகள் விசாரணை:</h2>
<p>இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:<br />"கைது செய்யப்பட்டுள்ள பிரபாகரனின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மற்ற மருந்துகளுக்கு உரிய அனுமதி உள்ளதா? அல்லது அவையும் போலியாக தயாரிக்கப்படுகிறதா? என்பது குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட போலி வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு மட்டும் கடத்த திட்டமிடப்பட்டதா அல்லது இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது." புதுச்சேரி தொழிற்சாலையில் கைப்பற்றப்பட்ட அனைத்து மருந்துகளையும் மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வகப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.</p>
<h2>ஏற்கனவே சிபிஐ வசம் உள்ள முந்தைய வழக்கு:</h2>
<p>புதுச்சேரியில் ஏற்கனவே போலி மருந்து தொழிற்சாலை நடத்தப்பட்டு, நாடு முழுவதும் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி நிறுவனத்தின் புகாரைத் தொடர்ந்து புதுவை சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, உரிமையாளர் ராஜா உட்பட 25-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் பல மாநிலத் தொடர்புகள் இருந்ததால், துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனின் பரிந்துரையின் பேரில், மத்திய உள்துறை அமைச்சகம் இவ்வழக்கை தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளது.</p>
<p>அந்த வழக்கின் விசாரணை ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் சூழலில், புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை பிடிபட்டிருப்பது பொதுமக்களிடையேயும், மருந்துத் துறையினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
Source: Read Full Article