
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> தஞ்சாவூரில் ஆறு நாட்கள் மின்னொளியில் விறுவிறுப்பாக நடைபெற்ற அகில இந்திய கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் கேரள மாநில போலீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை தட்டிச்சென்று அசத்தியது.</p>
<p style="text-align: justify;">தஞ்சை பரிசுத்தம் நகரில் உள்ள கிட்டு கால்பந்து மைதானத்தில் நேதாஜி கால்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான மின்னொளி கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. சிட்டி யூனியன் வங்கி மற்றும் சிவசிதம்பரம்பிள்ளை ஜூவல்லரி இணைந்து ஆதரவு வழங்கிய இந்தப் போட்டியை தொழிலதிபர் ரவிவம்பாளியார் தொடங்கி வைத்தார்.</p>
<p style="text-align: justify;">தினமும் மாலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த 20 முன்னணி அணிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தின.</p>
<p style="text-align: justify;">லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய கேரள மாநில போலீஸ் அணியும், தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கால்பந்து அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.</p>
<p style="text-align: justify;">ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் கேரள மாநில போலீஸ் அணி அடித்த ஒரே கோல் வெற்றியை உறுதி செய்தது. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற கேரள மாநில போலீஸ் அணி சாம்பியன் பட்டத்தையும், சுழற்கோப்பையையும் கைப்பற்றியது.</p>
<p style="text-align: justify;">தமிழ்நாடு தளபதி <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> கால்பந்து அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. யுனைடெட் கேரளா அணி மூன்றாவது இடத்தையும், தமிழ்நாடு போலீஸ் அணி நான்காவது இடத்தையும் பெற்றன.</p>
<p style="text-align: justify;">இறுதிப்போட்டியை தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார்.</p>
<p style="text-align: justify;">பரிசுத் தொகையாக முதல் பரிசு ரூ.2 லட்சத்து 22 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.1 லட்சத்து 11 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.66 ஆயிரம் மற்றும் நான்காவது பரிசு ரூ.33 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் அதிக கோல்கள் அடித்த வீரர், சிறந்த வீரர் மற்றும் சிறந்த அணிகளுக்கும் தனித்தனி சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.</p>
<p style="text-align: justify;">மொத்தமாக ரூ.8 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகை, சுழற்கோப்பைகள், கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நேதாஜி கால்பந்து கழக செயலாளர் முருகதாஸ் மற்றும் கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். ரசிகர்களின் ஆரவாரத்துடன் நிறைவடைந்த இந்த மின்னொளி கால்பந்து போட்டி தஞ்சாவூரில் விளையாட்டு ஆர்வலர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.</p>
Source: Read Full Article