
<h2>சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம்</h2>
<p>தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேர பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனையடுத்து பொதுமக்கள் வசதிக்காக குறிப்பிட்ட இடங்களுக்கு உடனே சென்று சேர மெட்ரோ ரயில் திட்டமானது தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் விமான நிலையத்திற்கும், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு மட்டுமல்ல தினந்தோறும் அலுவலகம் செல்லும் மக்களுக்கும் பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது.</p>
<h2>மெட்ரோ ரயில் திட்டம் - முதலமைச்சர் ஆய்வு</h2>
<p>இந்த நிலையில் தான் முதலமைச்சர் விஜய் நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க பணிகளை துரிதமாக மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 118 கிலோமீட்டர் தொலைவிற்கு மூன்று வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாதவரம் முதல் சோளிங்கநல்லூர் , பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையில் தற்போது மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். </p>
<h2>மெட்ரோ ரயில் பணிகள்- விரைந்து முடிங்க</h2>
<p>மேலும் போரூர் முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் நிறைவடைந்தாலும் 6 ரயில் நிலையங்களில் பணிகள் நிறைவு பெறாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் வசதிக்காக ரயில் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் இயக்கத்தை உறுதிபடுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து பணிகளும் விரைந்து முடித்து சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை குறித்த காலத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரர்களுக்கு வலியுறுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். </p>
<h3>வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்டம்</h3>
<p>சென்னையில் காலை நேரத்தில் மக்கள் அலுவலகம் செல்லக்கூடிய இடங்கள், பள்ளிகள் உள்ள சாலை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பகலுக்கு மாற்றாக இரவு நேர கட்டுமான பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதே நேரம் மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்கு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் நிலையில் அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அவசியம் எனவும் முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/7-beauty-tips-to-follow-before-going-to-sleep-at-night-269416" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article