
<p style="text-align: justify;">தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், வனப் பாதுகாப்பை பலப்படுத்தவும் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் புதிய வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. முதலமைச்சரின் தலைமையிலான அரசின் வனத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், கொள்முதல் செய்யப்பட்ட 250 நவீன ஆயுதங்கள் மற்றும் புதிய வாகனங்களின் இயக்கத்தை வனத்துறை அமைச்சர் ஆர்.வீ. ரஞ்சித் குமார் தொடங்கி வைத்தார். குறிப்பாக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் 'காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின்' (TBGPCCR) கீழ், 3.91 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 54 புதிய மகிந்திரா பொலிரோ ரோந்து வாகனங்களையும் அவர் கொடியசைத்து இயக்கி வைத்தார்.</p>
<h3 style="text-align: justify;">முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் சவால்கள்</h3>
<p style="text-align: justify;">மாநிலத்தின் மிகவும் தொலைதூர மற்றும் சவாலான வனப்பகுதிகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வனப்பகுதிகளில் வேட்டையாடுதல் தடுப்பு ரோந்துப் பணிகள், வனவிலங்கு குற்றங்களைத் தடுத்தல், வன எல்லைகளைப் பாதுகாத்தல் மற்றும் மனித-வனவிலங்கு மோதல்களுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பது போன்ற ஆபத்தான சூழல்களில் முன்களப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக உதவி கிடைக்காத அடர்ந்த வனப்பகுதிகளில் வேலை செய்யும் இவர்களின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவும் நவீன உபகரணங்கள் அவசியமாக இருந்த நிலையில் இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.</p>
<h3 style="text-align: justify;">கொள்முதல் செய்யப்பட்ட அதிநவீன ஆயுதங்களின் விவரங்கள்</h3>
<p style="text-align: justify;">இதன் ஒருபகுதியாக முன்களப் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள 250 நவீன ஆயுதங்களில், 204 பன்னிரெண்டு போர் (12-Bore) பம்ப் ஆக்சன் துப்பாக்கிகள் (pump action guns) அடங்கும். இவை மடக்கக்கூடிய பக்கவாட்டு தோள்தாங்கியுடன் (Side-Folding Butt) வடிவமைக்கப்பட்டுள்ளன. வேட்டையாடுதல் தடுப்பு ரோந்துப் பணிகள், இரவுநேரக் கண்காணிப்பு மற்றும் மனித-வனவிலங்கு மோதல்களைக் கையாளுவதற்கு ஏற்றவாறு இந்தத் துப்பாக்கிகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதுதவிர, சட்ட அமலாக்கம், வனக் கண்காணிப்பு மற்றும் அவசரக்கால பதிலளிப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்காக 'குளோஸ் என்கேஜ்மென்ட் சிஸ்டம்' (CES) உபகரணங்களுடன் கூடிய 46 (9 mm) தானியங்கி கைத்துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நவீன ஆயுதங்கள் வனவிலங்கு குற்றங்களை தடுக்கவும், வனத்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பெரிதும் உதவும்.</p>
<h3 style="text-align: justify;">புதிய மகிந்திரா பொலிரோ ரோந்து வாகனங்களின் பங்களிப்பு</h3>
<p style="text-align: justify;">மேலும், கள அளவிலான உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள 54 மகிந்திரா பொலிரோ வாகனங்கள் முதற்கட்டமாக வனச்சரக அலுவலர்கள் (Range Officers) மற்றும் இதர கள அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொலைதூர வனப்பகுதிகளில் இவர்களின் இயக்கத் திறனை மேம்படுத்த இந்த வாகனங்கள் உதவும். வழக்கமான வன ரோந்துப் பணிகள், காட்டுத்தீ மேலாண்மை, காடுவளர்ப்பு திட்டங்களை கண்காணித்தல் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய பணிகளுக்கு இவை பயன்படுத்தப்படவுள்ளன. முக்கியமாக, காட்டுத்தீ, மனித-வனவிலங்கு மோதல்கள் மற்றும் வன ஆக்கிரமிப்புகள் போன்ற அவசர காலங்களில் வனத்துறையினர் விரைவாக சம்பவ இடத்திற்குச் சென்று உடனடி நடவடிக்கை எடுக்க இந்த வாகனங்கள் வழிவகை செய்யும்.</p>
<h3 style="text-align: justify;">தொடக்க விழாவில் பங்கேற்ற முக்கிய அதிகாரிகள்</h3>
<p style="text-align: justify;">சென்னையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீநிவாஸ் ஆர். ரெட்டி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா, திட்ட இயக்குநர் எஸ். ராமசுப்பிரமணியன் மற்றும் வனத்துறையின் மூத்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். வன வளங்களையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதில் இந்த நவீன முன்னெடுப்புகள் மிக முக்கியப் பங்காற்றும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Source: Read Full Article