
<h2 dir="ltr">மனைவி - குழந்தையை பிரிந்து வாழும் கணவன்</h2>
<p dir="ltr">வேலூர் அருகேயுள்ள சதுப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதுடைய வினோத்குமார். பெயிண்டராக பணியாற்றி வந்த இவர், திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.</p>
<p>இதே போல் , சிறுகாஞ்சி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ராகுலும் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.</p>
<h2><strong>திருமணம் மீறிய உறவு</strong></h2>
<p>அந்தப் பெண்ணுடன் வினோத் குமாருக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக வினோத்குமார் அந்த பெண்ணை ராகுலுடன் பேச வேண்டாம் என்று கண்டித்து வந்திருக்கிறார்.</p>
<p>அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்ற வினோத்குமார், ராகுலுடன் பழகக் கூடாது என்றும், `ராகுலுடன் பழகக் கூடாது. நீ எனக்கு மட்டும் தான்' என்றும் கூறி தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பெண் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து , இனிமேல் தனது வீட்டுப் பக்கம் வர வேண்டாம் என எச்சரித்ததாக கூறப்படுகிறது.</p>
<p>அப்போது அங்கு வந்த ராகுலுக்கும், வினோத்குமாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், அப்பகுதி மக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அந்த மோதலால் ஆத்திரம் அடங்காத ராகுல், இரவு நேரத்தில் பழிவாங்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.</p>
<h2><strong>" அவள் எனக்கு மட்டும் தான் "</strong></h2>
<p>அப்போது, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் வினோத்குமார் மது அருந்திக் கொண்டிருந்ததை பார்த்த ராகுல், அவரிடம் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.</p>
<p>பின்னர், போதையில் இருந்த வினோத்குமாரை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியதுடன், கழுத்தில் குத்தி கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார்.</p>
<p>கொலை செய்த பிறகும் ஆத்திரம் அடங்காமல், "அவள் எனக்கு மட்டும் தான் " என்று கூறியபடி , கொலைக்கு பயன்படுத்திய இரும்புக் கம்பியை அருகிலிருந்த கிணற்றில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p>
<h2><strong>கைது - போலீசார் விசாரணை</strong></h2>
<p>சிறுகாஞ்சி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வினோத்குமார் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரியூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர்.</p>
<p>விசாரணையின் போது கிடைத்த தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ராகுலை ராகுலை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
Source: Read Full Article