
<h2 dir="ltr"><strong>குழந்தைகளை காணவில்லை என புகார்</strong></h2>
<p dir="ltr">தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ரங்கநாதபுரம் அம்பேத்கார் தெருவில் வசித்து வருபவர் சின்னத் தம்பி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கும் திருமணமாகி 13 வயதில் சபரீசன் மற்றும் 12 வயதில் ஹரிஷ் என இரண்டு மகன்கள் இருந்தனர்.</p>
<p>இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள வெங்கடாசலபதி நடுநிலைப்பள்ளியில் முறையே 7 மற்றும் 6 - ம் வகுப்பில் படித்து வந்தனர். கடந்த ஜூலை 24-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இருவரும், மாலை நேரத்தில் வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை.</p>
<p>பல இடங்களில் தேடியும் குழந்தைகள் கிடைக்காததால், மறுநாள் காலை பெற்றோர் போடி தாலுகா காவல் நிலையத்தில் குழந்தைகள் மாயமானதாக புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.</p>
<h2><strong>திருமணம் மீறிய உறவு</strong></h2>
<p>விசாரணையின் ஒரு பகுதியாக , அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் , வயதான கேசவ பாலாஜி என்ற இளைஞருடன் நடந்து செல்வதை கண்டுபிடித்தனர். இதற்கிடையில் இரண்டு சிறுவர்களும் போடி அருகே கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். எனவே உடனடியாக கேசவ பாலாஜியை பிடித்து விசாரணை நடத்திய போது , அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளியாகின.</p>
<p>கேசவபாலஜி தாயுடன் சின்னத் தம்பி தகாத உறவில் இருந்ததால் , ஆத்திரமடைந்த அவர் பழிவாங்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் சின்னத் தம்பி மகன்களை கொலை செய்ய திட்டமிட்டதாக வாக்கு மூலம் அளித்துள்ளார். அதன் படி, " காட்டுப்புறா பிடித்து தருகிறேன் " என்று ஆசை வார்த்தை கூறி , இரண்டு சிறுவர்களையும் போடி அருகே கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.</p>
<p>அங்கு சுமார் 150 அடி ஆழமுள்ள, சுற்றுச் சுவர் இல்லாத கிணற்றை காட்டி, புறாவை பிடிக்கலாம் என்று கூறி அருகே அழைத்துச் சென்ற அவர், திடீரென இருவரையும் கிணற்றுக்குள் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.</p>
<p>இதையெடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் , கேசவ பாலாஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.</p>
<p>மேலும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட கேசவபாலாஜி வசிக்கும் வீட்டின் அருகே பொது மக்கள் கடும் ஆத்திரம் அடைந்ததால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், "காட்டுப்புறா பிடித்துத் தருகிறேன்" என்ற நம்பிக்கையில், மகிழ்ச்சியுடன் கேசவபாலாஜியை பின் தொடர்ந்து செல்லும் இரண்டு சிறுவர்களின் கடைசி சிசிடிவி காட்சிகள் வெளியாகி , பார்ப்பவர்களின் மனதை உலுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது</p>
Source: Read Full Article