
<p style="text-align: justify;">2027-ஆம் ஆண்டிற்கான உயரிய பத்ம விருதுகள் வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழாவில் வழங்கப்பட உள்ளன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகச் சேவை, அறிவியல், மக்கள் தொடர்பு, பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசால் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த, விளையாட்டுத் துறையில் தனித்துவமான சாதனைகள் படைத்த தகுதியுள்ள நபர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எம். வீரப்பன் தெரிவித்துள்ளார்.</p>
<h3 style="text-align: justify;">விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் நடைமுறைகள்</h3>
<p style="text-align: justify;">பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களது வாழ்நாளில் தனித்தன்மையுடன் உயரிய சாதனைகளைப் படைத்திருக்க வேண்டும். இச்சாதனைகள் அனைவராலும் விரும்பத்தக்கதாகவும், நாட்டின் மிகயுயர்ந்த தர நிர்ணயங்களுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும். பத்ம விருது நாட்டின் இரண்டாவது உயரிய விருது என்பதால், விண்ணப்பதாரர்கள் தங்களது துறையில் ஏற்கனவே மாநில அளவிலான விருதோ அல்லது தேசிய விருதோ பெற்றிருப்பது அவசியமாகும். மேலும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள், நலிவடைந்த பிரிவினர், தாழ்த்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு பரிந்துரைக்கப்படுவர். </p>
<p style="text-align: justify;">பொதுவாக மறைந்த சாதனையாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுவதில்லை என்றாலும், மிகத் தகுதியான நபர்கள் விருது அறிவிக்கப்படும் தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் மறைந்திருந்தால், அவர்கள் பெயர் பரிசீலிக்கப்படும். ஏற்கனவே பத்ம விருது பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டுமெனில், விருது பெற்ற நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்; எனினும், மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு இந்த காலக்கட்டுப்பாட்டில் விதிவிலக்கு அளிக்கப்படும். அரசுப் பணியாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களைப் பொறுத்தவரை, மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளைத் தவிர மற்றவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.</p>
<h3 style="text-align: justify;">விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்</h3>
<p style="text-align: justify;">தகுதியுடைய நபர்கள் https://awards.gov.in அல்லது http://padmaawards.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையவழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் மூன்று நகல்களை (3 Copies) தயாரித்து, 'மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு வளாகம், செங்கல்பட்டு மாவட்டம்' என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">இவ்விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 31.07.2026ஆகும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை அலுவலக வேலை நேரங்களில் 7401703461 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.</p>
Source: Read Full Article