
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தீவனக் கட்டுப்பாட்டு முறையை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31 முதல் காலவரையற்ற கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. </p>
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூரில் மாநில அவசர செயற்குழுக் கூட்டம்</strong></p>
<p style="text-align: justify;">தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பின் மாநில அவசர செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், கோழி இறைச்சி விற்பனையாளர்கள் மற்றும் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.</p>
<p style="text-align: justify;">கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களை சந்தித்த கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி. துரைராஜ், முக்கிய தீர்மானங்களை அறிவித்தார்.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/27/0f1a9b47b21eb65837e8874d6999cd701785159277788733_original.jpg" /></p>
<p style="text-align: justify;"><strong>புதிய தீவன நடைமுறை மீது கடும் எதிர்ப்பு</strong></p>
<p style="text-align: justify;">அவர் கூறியதாவது: பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீவனம் வழங்கும் புதிய நடைமுறையே தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.</p>
<p style="text-align: justify;">சர்வதேச தரநிலைகளின்படி, அறுக்கப்படவுள்ள கோழிகளுக்கு குறைந்தபட்சம் 8 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் நிறுத்தப்பட வேண்டும். உதாரணமாக, காலை 6 மணிக்கு அறுக்கப்படவுள்ள கோழிக்கு முந்தைய நாள் மாலை 6 மணிக்குப் பிறகு தீவனம் வழங்கப்படக்கூடாது என்பதே உலகளாவிய நடைமுறையாக உள்ளது.</p>
<p style="text-align: justify;">ஆனால் தற்போது சில கோழி உற்பத்தி நிறுவனங்கள், பண்ணைகளிலிருந்து விற்பனை மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் போதும் கோழிகளுக்கு தீவனம் வழங்கும் முறையை பின்பற்றுவதாக தன்னிச்சையாக தெரிவித்துள்ளது கண்டனத்துக்கு உரியது.</p>
<p style="text-align: justify;"><strong>நுகர்வோர் சுகாதாரத்துக்கு ஆபத்து?</strong></p>
<p style="text-align: justify;">இந்த புதிய நடைமுறையால் கோழிகளை அறுக்கும் போது குடல் கழிவுகள் இறைச்சியுடன் கலக்கும் அபாயம் அதிகரிக்கும் நிலை உள்ளது. இதனால் இறைச்சியின் தரம் குறையும். சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். நுகர்வோருக்கு தரமற்ற கோழிக்கறி கிடைக்கும். கடைகளில் சுகாதார சிக்கல்கள் உருவாகும். விற்பனையாளர்களுக்கு தினசரி கணிசமான பொருளாதார இழப்பு ஏற்படும்.</p>
<p style="text-align: justify;">இதனை கருத்தில் கொண்டு, பழைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும், அரசே இதை கண்காணித்து தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.</p>
<p style="text-align: justify;"><strong>70 ஆயிரம் கடைகள் மூடப்படும் அபாயம்</strong></p>
<p style="text-align: justify;">இந்தக் கோரிக்கைக்கு அரசு மற்றும் கோழி உற்பத்தி நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் ஜூலை 31 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும்.</p>
<p style="text-align: justify;">இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் சுமார் 70 ஆயிரம் கோழி இறைச்சி விற்பனைக் கடைகள் மூடப்படும் நிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>12 லட்சம் கிலோ கோழிக்கறி விற்பனை பாதிக்கும்</strong></p>
<p style="text-align: justify;">இந்த வேலைநிறுத்தம் நடைமுறைக்கு வந்தால், தினசரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விற்பனையாகும் சுமார் 12 லட்சம் கிலோ கோழிக்கறி சந்தைக்கு வராமல் போகும்.</p>
<p style="text-align: justify;">மேலும், கோழி இறைச்சி விற்பனையைச் சார்ந்து வாழும் விற்பனையாளர்கள், வெட்டும் தொழிலாளர்கள், போக்குவரத்து பணியாளர்கள், மொத்த வியாபாரிகள் உள்ளிட்ட ஏறத்தாழ 10 லட்சம் பேரின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்படும்.</p>
<p style="text-align: justify;"><strong>கேரள விற்பனையாளர்களும் ஆதரவு</strong></p>
<p style="text-align: justify;">இந்த போராட்டத்திற்கு பக்கத்து மாநிலமான கேரள கோழி விற்பனையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு மாநிலத் தலைவர் பி. துரைராஜ் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">எனவே, நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்பே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கோழி உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">இதில் மாநிலச் செயலாளர் எம். சுந்தரலிங்கம், பொருளாளர் எஸ். ஜான் கென்னடி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.</p>
Source: Read Full Article