
<p>புதுச்சேரி: சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) வழியாக புதுச்சேரி செல்வதற்கான பயண நேரம் 4 மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாகக் குறையும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய சென்னை மண்டல அதிகாரி வீரேந்திர சாம்பியால் தெரிவித்துள்ளார்.</p>
<p>புதுச்சேரி அரசின் செய்தி விளம்பரத்துறை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் இணைந்து, 'செயற்கை நுண்ணறிவு மூலம் போலி செய்திகளை கண்டறிதல்' என்ற பயிற்சி முகாமை நேற்று காலை சன்வே ஓட்டலில் நடத்தின. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய தேசிய நெடுஞ்சாலை ஆணைய சென்னை மண்டல அதிகாரி வீரேந்திர சாம்பியால், புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்து விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.</p>
<h2>சென்னை - புதுச்சேரி பயண நேரம் குறையும்:</h2>
<p>சென்னையிலிருந்து புதுச்சேரி செல்வதற்கு திண்டிவனம் வழியாகச் செல்லும் பிரதான பாதை மற்றும் கடற்கரையை ஒட்டிச் செல்லும் ஈசிஆர் சாலை என இரண்டு வழிகள் உள்ளன. இதில் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தாலும், அது இன்னும் முழுமையாக 4 வழிச்சாலையாக மாறவில்லை.</p>
<p>தற்போது, மகாபலிபுரம் முதல் புதுச்சேரி வரையிலான 108 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை 332 ஏ வழித்தடத்தை, ரூ.2,477 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த உள்கட்டமைப்பு பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடையும் போது, சென்னை - புதுச்சேரி இடையேயான பயண நேரம் சுமார் 4 மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாகக் கணிசமாகக் குறையும். மேலும், இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது புதுச்சேரி நகர்ப்புறப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறையும்.</p>
<h2>புதுச்சேரியில் ரூ.1,619 கோடியில் நெடுஞ்சாலைப் பணிகள்:</h2>
<p>புதுச்சேரி பகுதியில் என்.எச். 32, 332 மற்றும் 332 ஏ ஆகியவற்றை உள்ளடக்கி மொத்தம் 38 கி.மீ. தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. புதுவையில் மட்டும் சாலை பாதுகாப்பு, பயண நேரத்தைக் குறைத்தல் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1,619 கோடி மதிப்பிலான பணிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடையும் போது சென்னை-புதுச்சேரி வழித்தடம் மிகவும் வேகமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாறும்.</p>
<p>மேலும், புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை 32-ல் நகர்ப்புறப் பகுதியை சுமார் 3 கி.மீ தூரத்திற்கு அழகுபடுத்துவதற்காக ரூ.4.25 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.</p>
<h2>ரூ.436 கோடியில் புதிய உயர்மட்டப் பாலம்:</h2>
<p>புதுச்சேரியின் முக்கியப் பகுதிகளான இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் ராஜீவ் காந்தி சதுக்கத்தை இணைக்கும் வகையில் 3.88 கி.மீ நீளத்திற்கு பிரம்மாண்ட உயர்மட்ட பாலம் கட்டப்படவுள்ளது. இதற்காக ரூ.436 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, 30 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<h2>சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலப் பணி நிலவரம்:</h2>
<p>நாட்டின் முதலாவது மிக நீளமான பாலமான, 21 கி.மீ. தூரத்தைக் கொண்ட சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலப் பணிகள் ரூ.5,600 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில் தற்போது 22 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. கூவம் ஆற்றின் மேல்புறமாக 15.5 கி.மீ. தூரத்திற்கு இந்த மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மழைக்காலங்களான செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஆற்றுப் பகுதியில் பணிகள் எதுவும் நடைபெறாது என்றும், இத்திட்டம் ஒட்டுமொத்தமாக மார்ச் 2029-க்குள் முழுமையாக நிறைவு பெறும் என்றும் வீரேந்திர சாம்பியால் தெரிவித்தார்.</p>
<h2>இதர முக்கிய திட்டங்கள்:</h2>
<p>நடப்பு நிதியாண்டில், ரூ.3,098 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு - திண்டிவனம் நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.</p>
<p>திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை விபத்துகளே இல்லாத 'விபத்தில்லாச் சாலையாக' மாற்றுவதற்காக, ரூ.147 கோடி செலவில் 7 முக்கிய இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்படவுள்ளன.</p>
<p>ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டங்கள் அனைத்தும் முடிவடையும் பட்சத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையேயான போக்குவரத்து கட்டமைப்பு அடுத்த கட்டத்திற்கு நகரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.</p>
Source: Read Full Article