
<p style="text-align: justify;">செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளது. ஆன்மீக சிறப்புமிக்க இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் ஆடிப்பூரம் பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, வரும் 14.08.2026 வெள்ளிக்கிழமை அன்று செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.</p>
<h3 style="text-align: justify;">அரசாணை மற்றும் சட்ட விதிகளின் கீழ் அறிவிப்பு</h3>
<p style="text-align: justify;">இந்த உள்ளூர் விடுமுறையானது தமிழ்நாடு அரசின் பொது (பல்வகை)த் துறை அரசாணை (நிலை) எண்.154, நாள்: 03.09.2009-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்கீழ் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை நாளானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Negotiable Instruments Act 1881)-ன் கீழ் அறிவிக்கப்பட்ட விடுமுறை அல்ல என்பதால், இது வங்கிகள் மற்றும் வணிக சார்ந்த பணிகளுக்குப் பொருந்தாது என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">ஈடுசெய்யும் வேலை நாள் அறிவிப்பு</h3>
<p style="text-align: justify;">திருவிழா நாளன்று அளிக்கப்படும் இந்த உள்ளூர் விடுமுறையினால் அரசுப் பணிகள் பாதிக்கப்படாத வண்ணம், அதனை ஈடுசெய்யும் வகையில் மாற்று வேலை நாளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14.08.2026 அன்று வழங்கப்படும் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, வரும் 29.08.2026 சனிக்கிழமை அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் சாதாரண பணி நாளாக (இயங்கும் வேலை நாளாக) இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை என்பதால், அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து மூன்று நாள் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.</p>
<h3 style="text-align: justify;">பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள்</h3>
<p style="text-align: justify;">ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும், பக்கத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூர் சித்தர் பீடத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் அதிக அளவிலான கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக இந்த உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Source: Read Full Article