
<p>ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கி நேற்று ஏவப்பட்ட நான்கு ஈரானிய ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், பின்னர் பதிலடியாக இஸ்லாமியக் குடியரசின் சில கடலோர கண்காணிப்பு ரேடார் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் ஈரான் மீது அழுத்தத்தை அதிகரித்து வரும் நிலையில், இது மீண்டும் போர் வெடிக்கும் அபாயத்தை மேலும் உயர்த்தியுள்ளது.</p>
<p>இந்த தாக்குதல் ட்ரோன்கள் பிராந்திய கடல்வழிப் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.</p>
<h2>மேற்கொண்டு தாக்குதல் நடப்பதை தடுக்கவே தாக்கியதாக அமெரிக்க ராணுவம் விளக்கம்</h2>
<p>உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கான முக்கிய வழித்தடத்தில் டெஹ்ரான் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாட்டிற்கு பதிலடியாக, ஈரானிய துறைமுகங்கள் மீது ராணுவம் முற்றுகையை அமல்படுத்தி வருகிறது. இந்த முற்றுகையால் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதுடன், நடைபெறவிருக்கும் இடைக்கால நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு அரசியல் சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன.</p>
<p>"மேற்கொண்டு தாக்குதல்கள் நடப்பதைத் தடுப்பதற்காக", ஜலசந்தியில் உள்ள ஒரு தீவு உட்பட ரேடார் தளங்களைத் தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>தற்போது நிலவும் பலவீனமான போர்நிறுத்தத்தையும், அதனை நீட்டிப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளையும் மேலும் சீர்குலைத்துவரும் வகையில் மாறி மாறி நிகழும் தாக்குதல்களின் சமீபத்திய சம்பவம் இதுவாகும். இந்த வார தொடக்கத்தில், குவைத்தின் பிரதான விமான நிலையத்தில் உள்ள பயணிகள் முனையத்தை ஈரானிய ஆளில்லா விமானங்கள் கடுமையாகத் தாக்கின. இதில் ஒருவர் கொல்லப்பட்டார், டஜன் கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், விமானத்தளம் சிறிது நேரத்திற்கு மூடப்பட்டது.</p>
<h2>“ஈரானுடனான பேச்சுவார்த்தை நன்றாகவே செல்கிறது“</h2>
<p>போர் நிறுத்தம் முறிந்துவிடுமோ என்ற புதிய கவலைகளை இந்த தாக்குதல்கள் ஏற்படுத்திய போதிலும், "ஈரானுடனான பேச்சுவார்த்தை மிகவும் நன்றாக செல்வதாக தெரிகிறது" என்று ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.</p>
<p><iframe title="Cockroach Janata Party | BJP-க்கு தலைவலியாக மாறிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி! டெல்லியில் போராட்டம்" src="https://www.youtube.com/embed/dQyIPxjmJqE" width="756" height="425" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>அது குறித்து பேசிய அவர், "நாம் ஈரானிலிருந்து மிக விரைவாக வெளியேறப் போகிறோம், அது ஒரு காகித ஆவணமாக(ஒப்பந்தம்) இருந்தாலும் சரி அல்லது மிகவும் கடுமையான வழியாக(தாக்குதல்) இருந்தாலும் சரி, எப்படியாவது மிகவும் வலுவாகவே வெளியேறுவோம்," என்று விஸ்கான்சினில் விவசாயிகளுடனான ஒரு நிகழ்வில் கூறினார். "அந்தக் கடுமையான வழி ஒருவேளை சுலபமான வழியாக இருக்கலாம், ஆனால் நாம் வெளியேறுவோம், மேலும் நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே உங்கள் உரங்களின் விலைகளும் வெகுவாகக் குறையும்." என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.</p>
<h2>குவைத்-பக்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்</h2>
<p>இதனிடையே, அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக, குவைத்-பக்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று அதிகாலை குவைத் மீது ஏவுகணை, ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன. அவற்றை தடுப்பதற்காக, அங்குள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக இயங்கின. குவைத் சர்வதேச விமான நிலையம் அருகே பல வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/watermelon-is-beneficial-for-heart-helps-to-control-blood-pressure-262914" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p>இதேபோல், பஹ்ரைனிலும் ஏவுகணை மற்றும் டிரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, தலைநகர் மனாமா முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கையாக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன. அதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.</p>
<p>கடந்த இரண்டு நாளுக்கு முன், குவைத் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், இந்தியர் ஒருவர் பலியான நிலையில், அந்த தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.</p>
Source: Read Full Article