
<p style="text-align: justify;">ஈரான் போர் காரணமாக இந்தியாவிற்கு எல்பிஜி வரத்து குறைந்து சிலிண்டர் தட்டுப்பாடு நீடிக்கிறது. இதன் காரணமாக சிலிண்டர் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 3000 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டது.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/81ca42bb700aee773a2c881ce94cf4c41781098690070193_original.jpg" /></p>
<p style="text-align: justify;">சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதனை வாங்கி பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உணவகங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனால் உணவுகளின் விலைகள் உயர்ந்துவிட்டன. வணிகரீதியான எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இந்திய ரயில்வே முக்கிய முடிவை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணம், ரயில் நிலையங்களுக்கு வருகை என லட்சக்கணக்கான மக்களுக்கு நாள்தோறும் உணவு, டீ, காபி ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்கிறது இந்திய ரயில்வே. சிலிண்டர் தட்டுப்பாடு ரயில்வேவையும் பாதித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில் மீண்டும் ரயில்களுக்குள்ளேயே உணவை சமைக்கும் முறையை IRCTC தொடங்கியுள்ளது. வந்தே பாரத், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற இந்தியாவின் முதன்மை ரயில்கள் அனைத்தும் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயங்குகின்றன. இந்த எல்ஹெச்பி பேண்ட்ரி கார்களில் (Pantry cars) ஏற்கனவே மின்சார வசதிகள் உள்ளதால், இனி ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கும் போதே மின்சாரம் மூலம் உணவு தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/ebe6d61ecc8a78fd6e1c422fa2c4a11c1781098710806193_original.jpg" /></p>
<p style="text-align: justify;">அதாவது சிலிண்டருக்கு மாற்றாக மின்சார அடுப்பு பயன்படுத்தப்படும் என்றும் ரயில்களுக்கு உள்ளேயே உணவு சமைத்து விநியோகம் செய்யப்படும் என்றும், அறிவித்துள்ளது. அதே போல ரயில் நிலையங்களில் உள்ள பெரிய உணவகங்கள், ஜன் ஆஹார் மையங்கள் மற்றும் புட் பிளாசாக்கள் போன்ற இடங்களிலும் எல்பிஜி சிலிண்டர்களுக்குப் பதிலாக இண்டக்ஷன் அடுப்புகள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வேயின் 60% சமையல் மின்சார முறைக்கு மாறவுள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்திய ரயில்வேக்கு தினசரி சமையல் தேவைகளுக்கு சுமார் 1,000 வணிக சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. ஒரு நாளைக்கு 17 லட்சம் பேருக்கு உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. ஓராண்டுக்கு 580 மில்லியன் பேருக்கு உணவு தயாரிக்கிறது. நெருக்கடியைச் சமாளிக்க IOCL, BPCL மற்றும் HPCL ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்களைப் பெற ஐஆர்சிடிசி ஒப்பந்தம் செய்துள்ளது. இருந்தாலும் ஒரு நாளைக்கு 1000 சிலிண்டர்கள் தற்போது கிடைப்பதில்லை என்பதால் மின்சார அடுப்புக்கு ஐஆர்சிடிசி மாறியுள்ளது.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/25e4766a3800cb0264f23e28c6e9a5571781098730499193_original.jpg" /></p>
<p style="text-align: justify;">ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வு மற்றும் சமையல் செலவுகள் அதிகரித்ததால், 2025-26 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ஐஆர்சிடிசி-யின் லாப வரம்பு 10.4%-லிருந்து 6.3% ஆகக் குறைந்துள்ளது. இந்நிலையில் தான் உணவு கட்டணங்கள்ஐ ஐஆர்சிடிசி உயர்த்தப்போகிறதா என்ற கேள்வி எழுகிறது. இறுதியாக 2019-ல் தான் ரயில் உணவு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன. தற்போதைய செலவுகளைச் சமாளிக்க கட்டணங்களை உயர்த்த வேண்டிய சூழல் இருந்தாலும், அது குறித்து ரயில்வே அமைச்சகம் தான் இறுதி முடிவு எடுக்கும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.</p>
Source: Read Full Article