
<p style="text-align: justify;">வீரத்திற்காகவும் தியாகத்திற்காகவும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ராவை பெற்றிருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம். ஒட்டுமொத்த தமிழ்நாடே பெருமைகொள்ளத்தக்க செயலை செய்திருக்கும் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.</p>
<p style="text-align: justify;"><strong><em>நடந்தது என்ன ?</em></strong></p>
<p style="text-align: justify;">தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம். இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப் பிரிவான 34 ராஷ்ட்ரிய ரைபில்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் உள்நுழைவதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கிறது. உடனடியாக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் படைபிரிவான 34 ராஷ்ட்ரிய ரைபில்ஸ் வீரர்கள் அந்த இடத்தை நோக்கி விரைகிறார்கள். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே கடுமையான மோதல், துப்பாக்கிச் சண்டை நடக்கிறது. பயங்கரவாதிகளை நோக்கி தமிழ்நாட்டிற்கே உரிய மறத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் மீனாட்சி சுந்தரம். ஒரு கட்டத்தில் பயங்கரவாதிகளை பல பிரிவுகளாக பிரிந்து எதிர்க்கக் கூடிய சூழல் உருவாகிறது. மீனாட்சி சுந்தரம் தன்னுடைய சக வீரர்களுடன் அதிக எண்ணிக்கை கொண்ட பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறார். பதிலுக்கு பயங்கரவாதிகளும் நவீன ரக துப்பாக்கிக்களைகொண்டு, நமது வீரர்களை நோக்கி சுடுகின்றனர். அதில், பல ராணுவ வீரர்களுக்கு கால், நெஞ்சு, வயிறு என பல இடங்களில் குண்டுகள்கள் பாய்கிறது. பலர் காயமடைந்து செயல்பட முடியாத நிலை உருவாகிறது. ஆனால், படை இருக்கும் சில வீரர்கள் பயங்கரவாதிகளை எப்படியாவது ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று தங்கள் உயிரைக் கூட பொறுட்படுத்தாமல் அவர்களோடு தீரத்தோடு சண்டையிடுகின்றனர். அவர்களில் ஒருவர் நமது தமிழ்நாட்டை சேர்ந்த மீனாட்சி சுந்தரம்.</p>
<p style="text-align: justify;"><strong><em>முகத்திலும் தோளிலும் குண்டுகள் பாய்ந்தன</em></strong></p>
<p style="text-align: justify;">அப்போது, படையை வழிநடத்தும் தலைவனான மீனாட்சி சுந்தரத்தை வீழ்த்த பயங்கரவாதிகள் ஒன்று சேர்ந்து அவரை நோக்கி தாக்குதல் நடத்தத் தொடங்குகின்றனர். பயங்கரவாதிகள் நமது ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை நோக்கி சுட்டதில் அவரது முகத்திலும் தோள் பட்டையிலும் குண்டுகள் பாய்கின்றன. நிலைகுலைந்து போய்கிறார் மீனாட்சி சுந்தரம். உடலில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில் அவருக்கு கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டு வந்திருக்கிறது. இருப்பினும், இந்த இடத்தில் பயங்கரவாதிகளை தப்பிக்க விட்டுவிட்டால் அது இந்தியாவிற்கே மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்ற எண்ணம் அவரது நெஞ்சில் தோன்றுகிறது. தன் மன வலிமையாலும் இந்திய தேசத்தின் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாகவும் இரண்டு குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையிலும் வீறுகொண்டு எழுகிறார் மீனாட்சி சுந்தரம். தன்னுடைய அணி வீரர்களை அந்த சூழலிலும் உற்சாகப்படுத்தி பயங்கரவாதிகளை அழிக்க உத்தரவிடுகிறார்கள். வாயிலும் தோளிலும் ரத்தம் சொட்ட, சொட்ட தன்னுடைய துப்பாக்கியை எடுத்து பயங்கரவாதிகளை நோக்கி குண்டுமழை பொழிகிறார். அவரின் துணிச்சலையும் அவரின் துப்பாக்கிக் குண்டுகளையும் எதிர்கொள்ள முடியாமல் பயங்கரவாதிகள் கொத்துக் கொத்தாக மாண்டு விழுகின்றனர். அவரின் இந்த பின்வாங்காத வீரம் அங்கிருந்த சூழலையே மாற்றியிருக்கிறது. மற்ற ராணுவ வீரர்களுக்கு புதிய தெம்பையும் துணிச்சலையும் கொடுத்திருக்கிறது. அதோடு, பயங்கரவாதிகளை தமிழக ராணுவ வீரரான மீனாட்சி சுந்தரம் சுட்டுக் கொன்றதால் பல ராணுவ வீரர்களின் உயிர்களையும் அவர் காப்பாற்றியிருக்கிறார்.</p>
<p style="text-align: justify;"><strong><em>வீர தீர செயலுக்கான உயரிய விருதை அளித்த குடியரசுத் தலைவர்</em></strong></p>
<p style="text-align: justify;">ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் இந்த துணிச்சலான அபார வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டி, வீர, தீர செயலுக்கான இந்தியாவின் 2வது உயரிய விருதான ’கீர்த்தி சக்ரா’ விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 8ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு இந்த விருதை அளித்திருக்கிறார்.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/z8beOGucBqI?si=VZFHu4Wl3t6oDpqJ" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p style="text-align: justify;"><strong><em>தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு பெருமை</em></strong></p>
<p style="text-align: justify;">இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையை திரட்டியபோது தமிழ்நாட்டில் இருந்து கொத்து, கொத்தாக வீரர்கள் புறப்பட்டு சென்று அவரது படையில் இணைந்து தாய் நாட்டிற்காக போராடி உயிர்நீத்தார்கள். அவர்களை தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கு அதிகமாக வீரர்களை அனுப்பும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. பல தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் தாய் நாட்டிற்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தங்களது உயிரை தியாகம் செய்திருக்கும் நிலையில், தன்னுடைய உயிரை சற்றும் பொருட்படுத்தாது நாட்டை காப்பதற்காக தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், முகத்திலும் தோளிலும் குண்டுகளை சுமந்து பயங்கரவாதிகளை அழித்திருப்பதை கண்டு, இந்தியாவே பெருமைகொள்ளும் இந்த தருணத்தில் அவர் தமிழ் மண்ணின் மகன் என்பதால் ஒரு படி மேலே சென்று தமிழ்நாட்டிற்கு கூடுதல் பெருமை கிடைத்திருக்கிறது.</p>
<p style="text-align: justify;"><strong>முதல்வர் அங்கீகாரம் செய்வாரா ?</strong></p>
<p style="text-align: justify;">இப்படி தமிழ்நாட்டிற்கு தன்னுடைய வீரத்தாலும் தியாகத்தாலும் பெருமை சேர்த்துள்ள இந்திய ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> அங்கீகாரம் செய்ய வேண்டும், அவரின் குடும்பத்தினரை அழைத்து அவர்களை கவுரவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.</p>
Source: Read Full Article