கோர்ட் உத்தரவிட்டும் மௌனம் காக்கும் காக்கிகள்! நில மோசடி கும்பலுக்கு போலீஸ் ரெட் கார்பெட் வரவேற்பா?

3 நாள் கெடு முடிந்தும் எப்.ஐ.ஆர் போடாதது ஏன்? கோவை மாநகர காவல்துறை மீது தேவராஜன் சேகர் பகிரங்கப் புகார்!

கோவை: கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நில விற்பனை மோசடி விவகாரத்தில், நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தும் மாநகர காவல்துறை மெத்தனமாகச் செயல்பட்டு வருவது சட்ட வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட தேவராஜன் சேகர் என்பவர் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தை நாடிய நிலையில், இந்த மோசடியில் தொடர்புடைய ராதாகிருஷ்ணன், அவரது மனைவி கீதா மேனன், மகள் ரஜிதா மேனன் மற்றும் குடும்ப நண்பர் அஸ்ரப் ஆகிய நால்வர் மீதும் மூன்று நாட்களுக்குள் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கடந்த 12-02-26 அன்று நீதிமன்றம் ‘ஸ்ட்ரிக்ட்’ உத்தரவு பிறப்பித்தது. ஆனால், நீதிமன்றம் விதித்த கெடு முடிந்து பல நாட்களாகியும் இதுவரை 'எப்.ஐ.ஆர்' பதிவு செய்யப்படாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பினர் தரப்பில் கூறப்படுவதாவது, ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு நில விற்பனை என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஆரம்பத்திலேயே காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டும், அவர்கள் உரிய விசாரணை நடத்தாமல் 'கிடப்பில்' போட்டதாகக் கூறப்படுகிறது. இதனாலேயே வேறு வழியின்றி பாதிக்கப்பட்ட தேவராஜன் சேகர் நீதிமன்றக் கதவுகளைத் தட்டியுள்ளார். நீதிமன்றம் முகாந்திரம் இருப்பதை உறுதி செய்து, உடனடியாக 'ஆக்ஷன்' எடுக்கச் சொன்ன பிறகும், காவல்துறை காலம் தாழ்த்துவது மோசடி கும்பலுக்குச் சாதகமாகச் செயல்படும் ஒரு 'ஹிடன் அஜெண்டா' எனப் புகார்கள் எழுந்துள்ளன.

நீதிமன்ற உத்தரவையே காற்றில் பறக்கவிடும் வகையில் காவல்துறையின் செயல்பாடுகள் இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். "மோசடி கும்பலுக்குப் பின்னால் ஏதேனும் அரசியல் 'செல்வாக்கு' இருக்கிறதா?" அல்லது "காவல்துறைக்கு ஏதேனும் 'பிரஷர்' கொடுக்கப்படுகிறதா?" எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. நில மோசடி கும்பலை 'அரெஸ்ட்' செய்யாமல் காலம்தாழ்த்துவது, அவர்கள் ஆதாரங்களை அழிக்கவும், வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லவும் வழிவகுக்கும் எனப் பயப்படும் பாதிக்கப்பட்ட தரப்பினர், தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடரவும் ‘பிளான்’ செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் உடனடியாகத் தலையிட்டு 'க்ரீன் சிக்னல்' கொடுத்தால் மட்டுமே நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk