ஆளுநரிடம் பட்டம் பெறாதது குற்றமல்ல! - மாணவியின் முனைவர் பட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி! Madras HC Refuses to Cancel PhD Degree of Student Who Declined Award From TN Governor

அரசியல் காரணங்களுக்காக ஆளுநரை அவமதித்ததாகத் தொடரப்பட்ட மனுவை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவியின் முனைவர் பட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அப்போது நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப், ஆளுநரிடம் பட்டம் பெறாமல் துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். ஆளுநரிடம் தான் பட்டம் பெற வேண்டும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அறிவுறுத்தியும், அதனை மாணவி ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிரானது எனக் கூறி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அது ‘விசாரணைக்கு உகந்தது அல்ல’ எனக் கூறி அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "தன் கணவர் திமுகவில் பொறுப்பில் இருப்பதாகவும், தமிழுக்காக ஆளுநர் எதுவும் செய்யவில்லை என்பதால் அவர் கையால் பட்டம் பெற விரும்பவில்லை என்றும் அந்த மாணவி பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார்; இது ஆளுநரை அவமதிக்கும் செயல்" என வாதிடப்பட்டது. மேலும், ஆளுநரிடம் பட்டம் பெறாத மாணவிக்கு வழங்கப்பட்ட பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இதற்கு உடந்தையாக இருந்த துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

எனினும், ஒரு மாணவி யாரிடம் பட்டம் பெற வேண்டும் என்பது அவரது விருப்பம் சார்ந்ததாக இருக்கலாம் என்பதையும், இதில் சட்ட விதிமீறல்கள் ஏதுமில்லை என்பதையும் கருத்தில் கொண்ட நீதிபதிகள், இந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர். ஆளுநரை விட உயர்கல்வித்துறை அமைச்சருக்கே பட்டம் வழங்க அதிகத் தகுதி உள்ளது என அந்த மாணவி கூறியது அரசியல் கருத்துகளாகப் பார்க்கப்பட்டாலும், அது பட்டத்தை ரத்து செய்வதற்குப் போதிய ஆதாரமாகாது என்பதை மறைமுகமாக உணர்த்தும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது. பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஏற்கனவே மோதல்கள் நிலவி வரும் சூழலில், இந்தத் தீர்ப்பு கல்வி வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk