திமுக-வுக்கு ஒரு நீதி... தவெக-வுக்கு ஒரு நீதியா? - அருண் ராஜ் கேள்வி One Justice for DMK and Another for TVK?" – Arun Raj

காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை; 2026-ல் இந்த நிலை மாறும்! - தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ் அதிரடி!

தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் அனல் பறந்து வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் திரு. அருண் ராஜ் அவர்கள் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஈரோட்டில் நாளை நடைபெற உள்ள தவெக-வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியைத் தடுக்கச் சதி நடப்பதாகவும், ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்த நிலைமை தலைகீழாக மாறும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்தார். ஈரோடு கூட்டத்திற்கு 80-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்துள்ள காவல்துறை, ஆளுங்கட்சியின் அரசியல் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

செய்தியாளர்களிடையே பேசிய அருண் ராஜ், "திமுக இளைஞரணி கூட்டங்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதி வழங்கும் அரசு, தவெக கூட்டங்களை மட்டும் முடக்கப் பார்க்கிறது; இது ஒரு இரட்டை நிலைப்பாடு. சேலத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இப்போது ஈரோட்டிலும் ஏகப்பட்ட தடைகளைத் தாண்டியே நாங்கள் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். தவெக தொண்டர்கள் எப்போதும் கண்ணியமானவர்கள்; எங்கள் கூட்டங்களில் பெண் காவலர்களிடம் அத்துமீறலோ, கடைகளில் கலவரமோ ஒருபோதும் நடந்தது கிடையாது. ரசிகர்களாக இருந்தவர்கள் இன்று பொறுப்புள்ள தொண்டர்களாக மாறிவிட்டனர். தலைவரை அருகில் பார்க்க வேண்டும் என்ற பேரார்வத்தால் ஏற்படும் முண்டியடிப்பைத் தவிர, சட்டம் ஒழுங்குப் பிரச்சனை எங்கும் இல்லை" என்று பகுப்பாய்வு செய்தார். தமிழகம் அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழும் மாநிலம் என்று குறிப்பிட்ட அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக-வும் பாஜக-வும் தங்களது அரசியல் லாபத்திற்காக மக்களைப் பிரிக்க முயல்வதாகவும், காவல்துறை நினைத்திருந்தால் இந்தப் பதட்டத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் சாடினார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகளைச் சாடிய அருண் ராஜ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்துப் பேசுகையில், "அவர் அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால், இன்று வகிக்கும் பதவியில் தொடர்ந்து நீடித்திருப்பார்" என்று பஞ்ச் வைத்தார். மேலும், முதல்வர் ஸ்டாலின் இதுவரை ஒரு முறையான செய்தியாளர் சந்திப்பைக் கூட நடத்தவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், "ஆட்சிக்காலம் முடியும் நிலையில் இருக்கும் முதல்வர், ஊடகங்களைச் சந்திக்கத் தயங்குவது ஏன்?" என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார். 

"ஜனநாயகன்" திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பல மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில், கரூரில் நடந்த நெரிசலைச் சினிமாவிற்காகப் பயன்படுத்தியதாகக் கூறுவது அருவருக்கத்தக்க விமர்சனம் என்று அவர் பதிலடி கொடுத்தார். 2026-ல் ஆட்சி மாற்றம் நிகழும்போது காவல்துறைக்கு முழு சுதந்திரம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், மக்களின் பாதுகாப்பிற்கே தவெக முன்னுரிமை அளிக்கும் என்று கூறித் தனது பேட்டியை முடித்தார்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk