சிறு குழந்தைகள் மனதில் இடம்பிடித்தவர் தான் முதல்வர்: எம்.ஜி.ஆர் போல விஜய் ஆட்சிக்கு வருவார் என பெஞ்சமின் அதிரடி!
சினிமாவில் வெற்றிகரமான நடிகராக இருந்து, தற்போது முழுநேர அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய், எதிர்காலத்தில் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி என, 'திருப்பாச்சி' திரைப்படத்தில் அவருடன் நடித்த நடிகர் பெஞ்சமின் கோவையில் செய்தியாளர்கள் மத்தியில் அனல் கக்கப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மை கராத்தே இன்டர்நேஷனல் பயிற்சி மையத்தின் 20வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நிஹான் ஷோட்டோகான் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. திருச்சி, சென்னை, காஞ்சிபுரம், கோவை, வேலூர், ஈரோடு, கரூர், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்-வீராங்கனைகள் இந்தப் போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். நிஹான் ஷோட்டோகான் கராத்தே சங்க தமிழ்நாடு தலைமைப் பயிற்சியாளர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில், விஜய் நடித்த 'திருப்பாச்சி' திரைப்படப் புகழ் நடிகர் பெஞ்சமின் பங்கேற்று போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பெஞ்சமின், உடல் நல ஆரோக்கியத்தைப் பேணுவதில் விளையாட்டின் முக்கியப் பங்களிப்பை வலியுறுத்தினார். மேலும், இந்தப் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்ட குழந்தைகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக இருந்து, பல நூறு கோடி ரூபாய் வசூலைக் குவிக்கும் படங்களில் நடித்து வந்த நடிகர் விஜய், தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளதை மனதார வரவேற்பதாகக் கூறினார்.அவர், “சிறு குழந்தைகளின் மனதில் இடம் பிடித்த நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் இருக்கிறார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களும், சிறு குழந்தைகள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்பதால், அவர் முதல்வரானார்” என்று வரலாற்று உண்மையைச் சுட்டிக்காட்டினார். அந்த வெற்றி வரிசையில், நடிகர் விஜய் கண்டிப்பாக தமிழகத்தை ஆளப் போவது உறுதி என்றும், விஜய் தனது அரசியல் அவதாரத்தின் மூலம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்றும் ஆணித்தரமாகக் கூறினார்.
