யெஸ் வங்கி கடன் மோசடி: மும்பை பாலி ஹில் வீடு உட்பட 40-க்கும் மேற்பட்ட சொத்துக்கள் பறிமுதல்; ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிராக அமலாக்கத்துறை தீவிர விசாரணை!
இந்தியப் பெரும் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிரான பண மோசடி வழக்கில், அமலாக்கத்துறை (Enforcement Directorate - ED) அவரது ₹3,084 கோடி மதிப்புள்ள 40-க்கும் மேற்பட்ட சொத்துக்களைத் தற்காலிகமாக முடக்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட சொத்துக்களில் முக்கியமாகப் பின்வருவன அடங்கும்:
மும்பையில் உள்ள அவரது பாலி ஹில் (Pali Hill) பிரமாண்ட வீடு.
டெல்லியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் சென்டர் (Reliance Centre).
மும்பை, புனே, தானே, ஹைதராபாத், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கிழக்கு கோதாவரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள பிற சொத்துக்கள் இதில் அடங்குகின்றன.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் (RCFL) ஆகிய நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்களை முறையற்ற விதத்தில் கையாடல் செய்து பண மோசடி செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியது.2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், யெஸ் வங்கி RHFL மற்றும் RCFL நிறுவனங்களில் சுமார் ₹5,000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்தது.
இந்தக் கடன்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமல், சட்டவிரோதமாகத் திசைதிருப்பி குழுமத்துடன் தொடர்புடைய பிற நிறுவனங்களுக்குக் கடன்களாக வழங்கப்பட்டு பண மோசடி நடந்திருப்பது அமலாக்கத்துறையின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.செபி விதிமுறைகளின்படி, பரஸ்பர நிதிகள் அனில் அம்பானி குழுமத்தின் நிதி நிறுவனங்களில் நேரடியாக முதலீடு செய்யத் தடை இருந்த நிலையில், யெஸ் வங்கியின் கடன் வெளிப்பாடு வழியாக இந்த பொதுமக்களின் நிதி மறைமுகமாக அம்பானி நிறுவனங்களுக்குச் சென்றுள்ளது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை அமலாக்கத்துறை தனது சோதனையின் மூலம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அனில் அம்பானியின் இந்தச் சொத்துக்களை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்களின் பிற கடன் மோசடிகள் குறித்தும் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
