இன்று மாலை ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் மக்கள் வாழ்வில் மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சி ஏற்படும்; திமுகவின் ஆட்சி முழக்கங்களைக் கடுமையாக விமர்சித்தார்!
முன்னாள் தெலங்கானா ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, “ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனமாக வைத்திருந்தார்கள்” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இந்த அதிரடிப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பேசிய அவர், “எல்லாருக்குமே ஒரு வான வேடிக்கை மாதிரி இன்று ஒரு அறிவிப்பைப் பிரதமர் மோடி வெளியிடப் போகிறார். நாளைய தினத்திலிருந்து நாம் எந்தப் பொருள் வாங்கினாலும் விலை குறைவாக வாங்க முடியும், பாக்கெட்டில் பணம் மிச்சமாகும்” என்று தெரிவித்தார். சுதந்திரம் அடைந்த பிறகு வரி குறைப்பு என்பது அரிதான நிகழ்வு என்றும், பிரதமரின் இந்த அறிவிப்பு ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சி என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, வீடு, கார், டூவீலர் எனப் பல பொருட்களின் மீதான வரி குறைப்பு மூலம் மக்களுக்குச் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும், இது இந்திய சுதந்திரத்திற்குப் பின் கிடைத்த ஒரு மிகப்பெரிய பொருளாதார சுதந்திரம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த தமிழிசை, “உங்களோடு நான், எங்களோடு நீயென வெறும் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, மின் கட்டணம், பதிவுக் கட்டணம் என அனைத்தும் ஏறிவிட்டன” என்று கடுமையாகச் சாடினார். அத்துடன், உங்களோடு ஸ்டாலின் என்பது தவறான வாதம். உங்களோடு பிரதமர் என்பதே சரியான முழக்கமாக இருக்கும்” என்றும் கூறினார்.
அதிமுக-பாஜக கூட்டணி வலுவாக இருப்பதாகக் கூறிய அவர், இது திமுகவினருக்குப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், பாஜகவை ‘பி-டீம்’ எனக் குற்றம் சாட்டுபவர்களுக்குப் பதிலளித்த அவர், பாஜக என்பது ‘பீப்பிள்ஸ் டீம்’ (மக்களின் அணி) என்று விளக்கமளித்தார். அமெரிக்காவில் உள்ள H1B விசா வைத்திருப்பவர்களுக்கு வெளியுறவுத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், பிரதமர் மோடி யாரையும் கைவிட மாட்டார் எனவும் அவர் உறுதியளித்தார்.