வழக்கில் சமரசம் இல்லை என நடிகை சாந்தினி தரப்பு வாதம்; ஏன் அப்போதே எதிர்க்கவில்லை? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி! - மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
சென்னை, செப்டம்பர் 25: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த பாலியல் வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ல் மணிகண்டன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட நிலையில், சாந்தினி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கை உயர் நீதிமன்றம் 2022-ல் இரு தரப்பினரின் சமரசத்திற்குப் பிறகுதான் முடித்து வைத்தது எனத் தெரிவித்தார். ஆனால், சாந்தினி தரப்பு வழக்கறிஞர், பாலியல் வழக்குகளில் சமரசம் கிடையாது; சமரசம் செய்யப்பட்டது என்பது பொய்யான தகவல் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் சமரச உத்தரவை எதிர்த்து ஏன் அப்போதே நீங்கள் மனு தாக்கல் செய்யவில்லை? தற்போது சமரசம் செய்யவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்று கூறி, இந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேசமயம், இந்த வழக்கு மூன்று ஆண்டுகளாக ஏன் பட்டியலிடப்படவில்லை என்பது குறித்து உச்ச நீதிமன்றப் பதிவாளர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை முடித்து வைத்தனர்.