சகோதரரின் மனைவி அளித்த புகார்; பணம், விலையுயர்ந்த பரிசுகள் கேட்டுத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு!
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி மீது, அவரது சகோதரரின் மனைவி வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகப் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்ய மும்பை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சமீபத்தில், நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியின் மனைவியான முஸ்கான் நன்ஹ்லானி, ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணைக் கொடுமைப் புகார் அளித்தார். இந்தப் புகாரில், திருமணத்தின்போது ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணையாகப் பணமும், விலையுயர்ந்த பரிசுகளும் கேட்டுத் துன்புறுத்தியதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கில் போலீசார் பதிவு செய்துள்ள எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி, நடிகை ஹன்சிகா மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
முஸ்கான் நன்ஹ்லானி அளித்த புகாரில், ஹன்சிகா நேரடியாக வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, இந்த மனுவை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
