பாதி விலையில் தங்கம், முதலீட்டுக்கு அதிக வட்டி என ரூ.60 கோடி மோசடி; மொத்த கைது எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
பாதி விலையில் தங்கம், அதிக வட்டி போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தி, பொதுமக்களிடம் ரூ.60 கோடி வரை மோசடி செய்த 'ART Jewellers and Trusted Profit Investment Company' தொடர்பான வழக்கில், மேலும் நான்கு பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை, முகப்பேரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த இந்த நிறுவனம், 'பாதி விலையில் தங்கம் திட்டம்', 'ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் வாரம் 3% வட்டி' போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களால் தமிழகம் முழுவதும் கிளைகளை ஏற்படுத்தி, பெருமளவில் பணம் வசூலித்து வந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு, இந்த நிறுவனம் ரூ.60 கோடி வரை ஏமாற்றியதாகப் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் நான்கு பேர் கைது:
இந்த வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது புழல் பகுதியைச் சேர்ந்த பானுவள்ளி, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சுஜாதா, ஆவடி பகுதியைச் சேர்ந்த திவ்யா, மற்றும் புழல் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் ஆகிய நான்கு பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த நான்கு நபர்களுக்கும் மோசடியில் உள்ள பங்கு என்ன, அவர்கள் எவ்வளவு மதிப்பிலான பணத்தை மோசடி செய்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மொத்தக் கைது எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.