இந்தியா:
இந்தியாவில் மனைவியுடன் கணவன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 375-ல் ஆண் தனது மனைவியுடன் கட்டாய உடலுறவில் ஈடுபட்டாலும் அந்த பெண்ணின் வயது 15-க்கு மேல் இருந்தால் அது பாலியல் வன்கொடுமையாக கருத்தப்படாது. இந்த சட்டப்பிரிவில் உள்ள சிறப்பு சலுகையால் மனைவியை கணவன் கட்டாய வன்புணர்வு செய்தாலும் இது குற்றமாக கருத்தப்படுவதில்லை.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண் தன் கணவன் தன்னை பாலியல் அடிமை போன்று நடத்துவதாகவும், கட்டாய உடல் உறவு மற்றும் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யும்படியும் கீழமை நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த பெண்ணின் கணவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பெண்ணின் கணவன் மீது பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி நாகபிரசன்னா, ஆண் ஆண் தான், சட்டம் சட்டம் தான், பாலியல் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை தான்.
கணவனான ஆண் மனைவியான பெண் மீது கட்டாய உடலுறவு செய்தால் அதுவும் பாலியல் வன்கொடுமை தான். பாலியல் வன்கொடுமையில் ஆணுக்கு தண்டனை உண்டு என்றால்,அந்த ஆண் கணவனாக இருந்தாலும் சரி’ என்றார். பெண் மீது மிருகத்தனமான கொடூரத்தை கட்டவிழ்த்து விட ஆண்களுக்கு எந்தவிதமான சிறப்பு சலுகைகளோ, உரிமமோ திருமண அமைப்பு வழங்காது, வழங்கவில்லை, வழங்கவும் கூடாது’ என்றார்.