உணவு மற்றும் பொம்மைக் கடைகளுக்கு மட்டுமே அனுமதி; 1,417 கடைகள் திட்டத்தை மறுஆய்வு செய்ய மாநகராட்சிக்கு ஆணை!
உலகப்புகழ் பெற்ற சென்னை மெரினா கடற்கரையைப் பொதுமக்கள் ரசிப்பதற்கான இடமாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, அதனை ஷாப்பிங் மாலாக மாற்ற முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினாவில் உணவுப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் பேன்சி பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும், மற்ற வகை கடைகளை அமைக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், மாநகராட்சி திட்டமிட்டுள்ள 1,417 கடைகளின் எண்ணிக்கையை மறுஆய்வு செய்து குறைக்க வேண்டும் என்றும், கடற்கரையின் தூய்மையைப் பேண ‘நீலக்கொடி’ (Blue Flag) சான்று பெறுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவது மற்றும் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் இன்று முக்கியத் தீர்ப்புகள் வெளியாகியுள்ளன. விசாரணையின் போது நீதிபதிகள் அமர்வு, “மெரினா கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது” எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டனர். கடற்கரையில் உணவுப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் அலங்கார (Fancy) பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர வேறு எந்தக் கடைகளும் இருக்கக் கூடாது எனத் தடை விதித்தனர்.
குறிப்பாக, உழைப்பாளர் சிலையின் பின்புறம் அமைந்துள்ள நிரந்தரக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மெரினாவில் தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறமுள்ள இடத்தையும் ‘நீலக்கொடி’ சான்று பெற்ற பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்படும் இடங்களில் எவ்விதக் கடைகளையும் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
ஏற்கனவே சென்னை மாநகராட்சி தரப்பில் கடற்கரையில் 1,417 கடைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது; இந்த எண்ணிக்கையை மறுஆய்வு செய்து, அதனைக் குறைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஒரு புதிய விரிவான திட்டத்தைத் தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். இந்த அதிரடி உத்தரவு மெரினா கடற்கரை வியாபாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடற்கரையின் அழகை மீட்டெடுக்கும் ஒரு மைல்கல்லாகப் பொதுமக்கள் கருதுகின்றனர்.
.jpg)