விஜய் கூட்ட நெரிசல் வழக்கு: விதிமீறல் ஏதுமில்லை! - உச்சநீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை! Karur Stampede Case: Madras HC Registrar Files Affidavit in Supreme Court Denying Violations

142 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல்; கிரிமினல் மனுவாகக் கருதியே வழக்கு பட்டியலிடப்பட்டது என விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பட்டியலிடப்பட்டதில் எந்தவித விதிமீறலும் இல்லை என உயர்நீதிமன்றப் பதிவாளர் உச்சநீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாகச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்துத் தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது சென்னை முதன்மை அமர்வு எப்படி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் 142 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரத்தை உயர்நீதிமன்றப் பதிவாளர் தாக்கல் செய்துள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணை நடைமுறைகளில் உச்சநீதிமன்றம் சில சந்தேகங்களை எழுப்பியிருந்தது. நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, விடுமுறை கால அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த விதம் குறித்து அறிக்கை கேட்டிருந்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றியே வழக்கு எண்கள் ஒதுக்கப்பட்டுச் சம்பந்தப்பட்ட அமர்வுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை கால அமர்வின் போது சிறப்பு அதிகாரியிடம் முறையீடு செய்யப்பட்டு, பின்னர் ஆய்வு செய்தே வழக்குகள் பட்டியலிடப்படும் என அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. தவெக தொடர்பான இந்த வழக்கை ஒரு பொதுநல வழக்காகக் கருதாமல், கிரிமினல் மனுவாகவே (Criminal Petition) கருதி விசாரணைக்கு எடுக்கப்பட்டதாகவும், ஏனெனில் இதில் எதிர் மனுதாரர்களாகக் காவல்துறையினர் இருந்தனர் என்றும் பதிவாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதி என். செந்தில்குமார் அவர்களின் வாய்மொழி உத்தரவின் அடிப்படையிலேயே இந்த வழக்கு அவரது அமர்வில் பட்டியலிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை கிளையில் இதே விவகாரம் தொடர்பான வழக்கு இருந்தாலும், பிரதான அமர்வில் கிரிமினல் மனுவாக இது பட்டியலிடப்பட்டதில் தங்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை எனப் பதிவாளர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி ஹெச்.பி. தினேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை விரைவில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk