தலைமை நீதிபதியின் தடையை உடைக்கத் துடிக்கும் கே.வி.என் நிறுவனம்; விஜய்யின் ‘இறுதிப் பட’ விவகாரத்தில் அதிரடி திருப்பம்!
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தனது விசாரணையைத் தொடங்க உள்ளது. படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு இன்று விசாரணை எண்கள் (Case Numbers) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், தணிக்கை வாரியத்தின் முட்டுக்கட்டையாலும், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் இடைக்காலத் தடையாலும் முடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) புரொடக்சன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால், விஜய் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஒரு மெல்லிய நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சில அரசியல் ரீதியான காட்சிகளுக்குத் தணிக்கை வாரியம் ஆட்சேபனை தெரிவித்து, அதனை மறு ஆய்வு குழுவிற்குப் பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி பி.டி. ஆஷா படத்திற்கு ‘யு/ஏ’ (U/A) சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்ததோடு, விசாரணையை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனால் பொங்கலுக்குப் படம் வெளியாகாது என்ற சூழல் உருவானது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய தயாரிப்பு நிறுவனத்தின் மனுவை இன்று பதிவுத்துறை ஏற்றுக்கொண்டு, அதற்கு விசாரணை எண்களை ஒதுக்கீடு செய்துள்ளது. “இந்த வாரத்திலேயே வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் முறையீடு செய்யத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டுத் தடையை நீக்கினால் மட்டுமே, பொங்கல் தினத்தில் ‘ஜனநாயகன்’ திரையரங்குகளுக்கு வர முடியும். டெல்லியில் ஒருபுறம் சிபிஐ விசாரணை, மறுபுறம் உச்ச நீதிமன்றத்தில் பட ரிலீஸ் போராட்டம் என நடிகர் விஜய்யைச் சுற்றி அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் அலைமோதி வருகின்றன.
