பாஜக இரட்டை இலக்க வெற்றியைப் பெறும்! ‘பராசக்தி’ வசன விவகாரம் மற்றும் கூட்டணி குறித்து கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் அதிரடிப் பேட்டி!
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொண்டேன்” எனப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் திருக்கோவிலில் இன்று (சனிக்கிழமை) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், தமிழக அரசியல் மாற்றங்கள் மற்றும் ‘பராசக்தி’ திரைப்படத் தணிக்கைச் சிக்கல் குறித்துப் பரபரப்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "முகலாயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் ஏராளமான இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டதை வரலாறு கூறுகிறது; குறிப்பாக முகமது கஜினி 17 முறை படையெடுத்துச் செல்வங்களைக் கொள்ளையடித்தார். இழந்த அந்தப் பெருமைகளை மீட்பதே எங்களது நோக்கம்" என்றார். தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிய அவர், "தை பிறந்துவிட்டது, வழியும் பிறந்துவிட்டது; அதிமுக - பாஜக - பாமக கூட்டணி இன்று பலமான சக்தியாக உருவெடுத்துள்ளது. தேமுதிகவுடன் இதுவரை அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றாலும், விரைவில் அவர்களும் எங்களது மெகா கூட்டணியில் இணைவார்கள் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், வரும் தேர்தலில் பாஜக இரட்டை இலக்க எண்ணிக்கையில் (Double Digits) சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுச் சட்டப்பேரவைக்குள் நுழையும் எனத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். எடப்பாடி பழனிசாமி முதல்வரானால் அமைச்சரவையில் பாஜக இடம் பெறுமா என்ற கேள்விக்கு, "தேர்தல் முடிவுகளே அதற்குப் பதில் சொல்லும்" எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார். இதற்கிடையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தில் அண்ணாவின் ‘தீ பரவட்டும்’ என்ற புகழ்பெற்ற வசனத்தை நீக்கச் சென்சார் போர்டு உத்தரவிட்டது குறித்துக் கேட்டபோது, "அந்தத் தணிக்கை முடிவுகள் குறித்து எனக்கு விபரமாகத் தெரியாது; ஆனால் அண்ணாவைப் பார்த்துப் பயப்பட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை" எனப் பதிலளித்தார். கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதையுமே இலக்காகக் கொண்டு பாஜக தனது அரசியல் பயணத்தைத் தொடரும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
.jpg)