தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை; ஜனவரி 6 போராட்டத்தைத் தவிர்க்கத் திமுக அரசு அதிரடி!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான 'பழைய ஓய்வூதியத் திட்டம்' (Old Pension Scheme - OPS) தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் இன்று ஒரு மிக முக்கியமான உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், இந்தக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
புதிய ஓய்வூதியத் திட்டம் வருமா? தற்போதைய நிலவரப்படி, 2021 சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்துவதில் உள்ள நிதிச் சிக்கல்களை அரசு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு மாற்றாக, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள 'உத்தரவாதமளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (Guaranteed Pension Scheme - GPS) போன்ற ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்த அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதாவது, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை விடக் கூடுதல் பலன்களையும், அரசு ஊழியர்கள் ஓரளவுக்கு ஏற்கக்கூடிய வகையிலான புதிய அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு இடைக்காலத் திட்டத்தை அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
2026 தேர்தலைக் குறிவைக்கும் திமுக:
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசு ஊழியர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க விரும்பாத திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய திருப்தியை அவர்களுக்கு வழங்கத் துடிக்கிறது. "வாக்குறுதிகள் காற்றோடு போகாது, அவை விரைவில் செயலாக்கப்படும்" என்ற செய்தியை உரக்கச் சொல்லவே இந்த அவசரக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஜனவரி 6 போராட்டத்திற்கு முன்பாகவே, அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அரசு ஊழியர்கள் மத்தியில் ஒருபுறம் எதிர்பார்ப்பையும், மறுபுறம் "பழைய திட்டமே வேண்டும்" என்ற உறுதியான நிலைப்பாட்டையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.
