ஜனவரிக்குள் நெல்லை வடக்கு புறவழிச்சாலை புதிய பாலம் திறக்கப்படும்! – அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு! New Bridge Across Thamirabarani in Nellai to Open by January: Minister EV Velu

ஜனவரிக்குள் நெல்லை வடக்கு புறவழிச்சாலை புதிய பாலம் திறக்கப்படும்! – அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு! New Bridge Across Thamirabarani in Nellai to Open by January: Minister EV Velu

51 கோடியில் பிரம்மாண்டப் பாலம்; மழையால் சேதமடைந்த சாலைகள் ஜனவரியில் சீரமைக்கப்படும் என உறுதி!


திருநெல்வேலி மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வடக்கு புறவழிச்சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய உயர்மட்டப் பாலப் பணிகளைத் தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிநவீன உபகரணங்களைக் கொண்டு பாலத்தின் கட்டுமானத் தரத்தை அமைச்சரே நேரடியாகச் சோதித்து, பணிகளைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, "நெல்லை வடக்கு புறவழிச்சாலையில் ஏற்கெனவே ஒரு பாலம் பயன்பாட்டில் உள்ளது. அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக ஒரு பாலம் கட்டத் திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, பழைய பாலத்தை விடப் புதிய பாலத்தை உயரமாகக் கட்ட மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தார். அதன்படி மறுமதிப்பீடு செய்யப்பட்டு, 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 210 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலத்தில் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 95 சதவீதப் பணிகள் முடிவடைந்துவிட்டன. வரும் ஜனவரி மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுப் பாலம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்" என்று மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.


தாமிரபரணி வெள்ளத்தில் சேதமடைந்த பாலங்களைச் சீரமைக்க ஏற்கெனவே 'டெண்டர்' விடப்பட்டுப் பணிகள் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சாலைகளின் நிலை குறித்துப் பேசுகையில், "அக்டோபர் முதல் டிசம்பர் வரை மழைக்காலம் என்பதால் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளன. மழை பெய்து கொண்டிருக்கும் போது தார்ச் சாலைகளைச் சீரமைக்க முடியாது என்பதால், டிசம்பர் மாதம் மழைக்காலம் முடிந்தவுடன் ஜனவரி முதல் போர்க்கால அடிப்படையில் சாலைச் சீரமைப்புப் பணிகள் தொடங்கும். அதேபோல், நெல்லை மேற்கு புறவழிச்சாலையில் 32 கிலோமீட்டர் தூரத்தில் முதற்கட்டமாக 12 கிலோமீட்டர் பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 8 கிலோமீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்" என்று ‘அப்டேட்’ செய்தார். உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.







புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks