யோகாவை மதத்தோடு இணைப்பது கொடூரமானது; மத்திய அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!
பகவத் கீதை என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடக்கிவிட முடியாத பாரதிய நாகரிகத்தின் ஒரு பகுதி என்றும், அது ஒரு தார்மீக அறிவியல் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது தீர்ப்பில் புகழாரம் சூட்டியுள்ளார். கோவை ஆர்ஷ வித்யா பரம்பரை அறக்கட்டளையின் சார்பில் அதன் அறங்காவலர் சுவாமி சர்வானந்த சரஸ்வதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த முக்கியக் கருத்துகளைத் தெரிவித்தார். வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் (FCRA) கீழ் தங்களது அமைப்பைப் பதிவு செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தபோது, அந்த விண்ணப்பம் தன்னிச்சையாக நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுதாரர் அமைப்பு ஒரு மத அமைப்பாகச் செயல்படுவதாகவும், பகவத் கீதையைப் போதிப்பது மதச் செயல்பாடாகக் கருதப்படுவதாகவும் மத்திய அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்திற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
பகவத் கீதையை ஒரு மதப் புத்தகமாகப் பார்க்காமல், அதை ஒரு ‘தார்மீக அறிவியல்’ என்று அழைப்பதே பொருத்தமானது எனத் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கனவே கீதையை ‘தேசிய தர்ம சாஸ்திரமாக’ அங்கீகரிக்கலாம் என்று கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மகாத்மா காந்தி, திலகர், அரவிந்தர் போன்ற மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் தேசத்தை எழுச்சியடையச் செய்யக் கீதையையே தங்களது ஆயுதமாகப் பயன்படுத்தினர் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51-A(f)-ன் படி, நமது நாட்டின் மிகச்சிறந்த கூட்டு கலாச்சாரத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்பதையும் நீதிபதி இந்தத் தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தினார்.
இதேபோல் யோகாசனம் குறித்தும் கருத்து தெரிவித்த நீதிபதி, யோகாவை வெறும் மதப் பிரஸம் மூலம் பார்ப்பது தவறானது என்றும், அது உடல் நலனுக்கான ஒரு உலகளாவிய மதச்சார்பற்ற அனுபவம் என்றும் கலிபோர்னியா நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி விளக்கினார். மனுதாரர் அமைப்பு ஏற்கனவே வருமான வரிச் சட்டத்தின் கீழ் முறையான அங்கீகாரம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, மத்திய அரசின் நிராகரிப்பு உத்தரவை அதிரடியாக ரத்து செய்தார். இறுதியாக, மனுதாரரின் ஆவணங்களை முறையாகப் பெற்றுக்கொண்டு, விதிகளுக்கு உட்பட்டு அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய புதிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என எஃப்சிஆர்ஏ (FCRA) இயக்குநருக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
