வங்கதேச தேர்தல் வன்முறை: மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு - இந்துக்கள் மீது தாக்குதல்!

வங்கதேச தேர்தல் வன்முறை: மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு - இந்துக்கள் மீது தாக்குதல்!
வங்கதேசத்தில் ரத்த ஆறு: அடுத்தடுத்து மாணவர் தலைவர்கள் மீது குறிவைப்பு - பற்றி எரியும் டாக்கா!

தேர்தல் நெருங்கும் வேளையில் உச்சகட்ட வன்முறை: இந்திய எதிர்ப்பு முழக்கங்களுக்கு இடையே மீண்டும் துப்பாக்கிச் சூடு!


டாக்கா: அண்டை நாடான வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அமைதிக்குச் சற்றும் இடமில்லாமல் வன்முறைச் சம்பவங்கள் ரத்தக் களரியாக மாறி வருகின்றன. கடந்த ஆண்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சியை வீழ்த்திய மாணவர் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் தற்போது குறிவைத்துத் தாக்கப்படுவது அந்த நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'இன்குலாப் மஞ்ச்' அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி விலகும் முன்னரே, நேற்று மற்றொரு மூத்த தலைவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

நேற்று காலை, மாணவர் அமைப்பின் புதிய அரசியல் கட்சியான தேசிய குடிமக்கள் கட்சியின் (NCP) தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முகமது மொதாலெப் சிக்தார் மர்ம நபர்களால் சுடப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவர் தற்போது உயிருக்குப் போராடிய நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் திட்டமிட்ட அரசியல் படுகொலை முயற்சிகள் என மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே கொல்லப்பட்ட ஷெரீப் ஓஸ்மான் ஹாதி தீவிர இந்திய எதிர்ப்பாளர் என்பதால், அவரது மரணத்திற்குப் பின்னால் இந்தியா இருப்பதாக ஆதாரமற்ற புகார்களைச் சில அமைப்புகள் கிளப்பி விட்டுள்ளன. இதன் விளைவாக, வங்கதேசத்தில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் அப்பாவி இந்து சிறுபான்மையினர் மீது கொடூரமான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. குறிப்பாக, தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டு, அவரது உடல் மரத்தில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது.

பிப்ரவரி 12-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளான அவாமி லீக் தடை செய்யப்பட்டுள்ளது. மற்றொரு புறம் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், அவரது கட்சியும் தலைமைத்துவ நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாணவர் அமைப்புகள் புதிய கட்சிகளைத் தொடங்கினாலும், அவர்களின் தலைவர்கள் மீதே நடத்தப்படும் இந்தத் தொடர் துப்பாக்கிச் சூடுகள் வங்கதேசத்தை ஒரு உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளுகிறதோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறுமா என்பது தற்போது மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks