"ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள், நீதிபதியை சாதியின் பெயரால் இழிவுபடுத்துவது எப்படி நியாயம்?" – பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கடும் கண்டனம்!
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், கட்சியின் மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான முன்னாள் எம்.பி. ராமலிங்கம் அவர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகம் தலைநிமிர தமிழனின் எழுச்சிப் பயணம் என்ற தலைப்பில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், வருகிற 22ஆம் தேதி கரூருக்கு வருகை தர உள்ள அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் அவர் கள நிலவரங்கள் குறித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் அவர் முக்கியமாக வலியுறுத்தியது, நீதிபதிகள் மீது ஜாதியைத் திணிக்கும் விவகாரமே ஆகும். ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என்று உறுதிமொழி ஏற்றவர்கள், ஒரு நீதிபதியை ஜாதியின் பெயரால் அவமதிப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். "இப்படிப்பட்ட கேவலமான ஒரு ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும் என்பதற்காகத்தான் எங்களது மாநிலத் தலைவர் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்," என்றும் அவர் விமர்சனத்தை முன்வைத்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக நீதிபதியைக் குறை கூறுவது என்பது திமுகவினர் தங்கள் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்வதற்குச் சமமாகும் என்று ராமலிங்கம் சாடினார். மேலும், தி.மு.க.வினருக்கு ஆட்சியை விட்டுப் போகப் போகிறோம் என்ற பயம் காரணமாகவும், இயலாமையின் காரணமாகவும் இதுபோன்ற நாடகங்களை நடத்துகிறார்கள் என்று அவர் தீர்க்கமாகக் குறிப்பிட்டார். இனி வரப்போகும் வழக்குகளிலும் தங்களுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தி.மு.க.வினர் நீதிபதிகளை மிரட்ட ஆரம்பித்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதற்குத் நீதிபதிகள் தான் சரியான தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திய அவர், "இன்று நீதிபதி சாமிநாதன் என்ற தனி நீதிபதிக்கு ஏற்பட்ட நிலையாகக் கருதிவிடாமல், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நீதிமன்ற நீதிபதிகளும் இதனை உணர வேண்டும்," என்றும் அறைகூவல் விடுத்தார். இந்த சர்ச்சைக்குரிய கேள்வி நாடு முழுவதும் திரும்பி உள்ளது என்றும், ஒரு நீதிபதியை ஜாதியின் பெயரால் அவமதிப்பு செய்யக்கூடாது என்றும் அவர் விதிமுறையை சுட்டிக் காட்டினார்.
முன்னதாக, கரூரில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் வருகிற 13 மற்றும் 14ஆம் தேதிகளில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள நிர்வாகிகளை அழைத்து சட்டமன்ற மாநாடுகள் நடத்தப்பட உள்ளது என்றும் அவர் நிர்வாகத் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
