'10 மாதங்களில் மாற்ற முடியாது!' - சுற்றுசூழல் அமைச்சர் சிர்சா பேட்டியில் பரபரப்பு அலசல்!
தலைநகர் புதுடெல்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசு மற்றும் நச்சுப் புகை சூழ்நிலை குறித்துத் தாம் மன்னிப்புக் கேட்பதாகவும், ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 10 மாதங்களுக்குள் எந்த ஒரு அரசாலும் காற்றின் தரத்தை உடனடியாக மாற்றிவிட முடியாது என்றும் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிதர் சிங் சிர்சா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாகத் தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் (ஆ.ஆ.க.) முன்னாள் அரசால் ஏற்பட்ட இச்சூழலை மாற்ற தற்போதைய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
செய்தியாளர்கள் ந்திப்பில் அவர் பேசுகையில், "டெல்லியில் நிலவும் ஸ்மோக் சூழலுக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். இந்தக் காற்றுமாசு ஒருநாள் அல்லது ஒரு வாரத்தில் ஏற்பட்டதல்ல. இது நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டதின் விளைவு. நாங்கள் ஆட்சிக்கு வந்து பத்து மாதங்களே ஆகிறது. இத்தனை குறுகிய காலத்தில், ஆம் ஆத்மி அரசால் ஏற்பட்ட இந்தச் சூழலை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது இயலாத காரியம்" என்று கடுமையான தொனியில் பதிலளித்தார்.
கடந்த காலங்களில் ஆம் ஆத்மி அரசு இந்தச் சூழலை வேடிக்கை பார்த்ததுடன், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான எந்த ஒரு திட்டமிடலையும் மேற்கொள்ளவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட பெருங்குழப்பங்களை நாங்கள் இப்போதுதான் சீர் செய்ய முயன்று வருகிறோம் என்றும் சிர்சா மீடியா முன் அழுத்தமாகப் பதிவு செய்தார். தற்போதைய அரசு காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு புதிய வியூகங்களையும், கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது எனவும், இவற்றின் முழுப் பலனும் வெளிப்படக் கால அவகாசம் தேவை என்றும் அவர் விளக்கம் கொடுத்தார். தலைநகரின் காற்றின் தரத்தை மேம்படுத்தும் சவால் நிறைந்த பணி தொடரும் என்றும், இதற்கு மக்களின் ஒத்துழைப்பும் தேவை என்றும் சுற்றுசூழல் அமைச்சர் தனது பேட்டியை முடித்துக் கொண்டார்
