முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை : கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆப் ரோடு பைக் ரேசில் - இருசக்கர வாகனத்தில் சீறிப்பாய்ந்த பெண்களை வியப்புடன் கண்டு ரசித்த மக்கள்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பா.ஜ.க கோவை மாநகர மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் தேசிய அளவிலான ஆஃப் ரோடு பைக் ரேஸ் நடைபெற்றது.
கோவை, பீளமேடு பகுதியில் மாவட்ட தலைவர் பிரனேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ரேசை மாநிலச் செயலாளர் அனுஷா ரவி கொடி அசைந்து துவங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புனே, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் ரூ.3.5லட்சம் பரிசு தொகை, கேடயங்களை வழங்கப்பட்டது.
அதே போல இந்த பந்தயத்தில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள், திறன் வாய்ந்த வீரர்களுக்கான போட்டி, இளம் தலைமுறை, சிறுவர்கள், பெண்கள் என பல பிரிவுகளில் நடைபெற்றது. பெண்களுக்கான பிரிவில் கோவை, பெங்களூர், கேரளா, புனே உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த 15 பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆஃப் ரோடு பைக் ரேஸை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடாக ஆம்புலென்ஸ் அவசர கால மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் கோவையில் ஆஃப் ரோடு ரேஸில் சீரி பாய்ந்த இரு சக்கர வாகனங்களை பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
in
விளையாட்டு