மத வெறுப்பைத் தூண்டுவோருக்குச் செக்: கர்நாடக சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா நிறைவேற்றம்!
மதம், ஜாதி, இனம் மற்றும் பாலின அடிப்படையில் வெறுப்பைப் பரப்புவதைத் தடுக்கும் வகையில், ‘கர்நாடக வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் (தடுப்பு) மசோதா 2025’ இன்று கர்நாடக சட்டப்பேரவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், வெறுப்புப் பேச்சுக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றிய இந்தியாவின் முதல் மாநிலம் என்ற வரலாற்றுப் பெருமையை கர்நாடகா பெற்றுள்ளது. சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் பேசுபவர்கள் மற்றும் எழுதுபவர்கள் மீது இந்தச் சட்டம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.
மதம், சாதி, இனம், மொழி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு தனிநபர் அல்லது அமைப்புக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது, எழுதுவது அல்லது இணையத்தில் பதிவிடுவது இந்தக் காப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும்.
முதன்முறையாக இக்குற்றத்தைச் செய்பவர்களுக்கு 1 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹50,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் தண்டனை 10 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் அனைத்தும் பிணையில் வெளிவர முடியாத மற்றும் பிடியாணையின்றி (Warrant) கைது செய்யத்தக்கக் குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளன.
வெறுப்புப் பேச்சால் மனதளவிலோ அல்லது உடலளவிலோ பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்க நீதிமன்றத்திற்கு இந்தச் சட்டம் முழு அதிகாரம் அளிக்கிறது. சமூக வலைதளங்கள் அல்லது இணையதளங்களில் பதிவேற்றப்படும் வெறுப்புப் பேச்சு தொடர்பான உள்ளடக்கங்களை உடனடியாக நீக்கவோ அல்லது முடக்கவோ அரசுக்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்படும் போது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தன. இந்தச் சட்டம் மக்களின் கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் இருப்பதாகவும், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க இது பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், மாநிலத்தில் நிலவும் வகுப்புவாத மோதல்களைத் தடுத்து, சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட இத்தகைய கடுமையான சட்டம் தற்போதைய சூழலில் மிகவும் அவசியம் என முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு விளக்கம் அளித்துள்ளது.
