100 நாள் வேலைத் திட்டத்தில் புதிய மாற்றம்; மாநிலங்களுக்குப் பெரும் நிதிச்சுமை - முதல்வர் எச்சரிக்கை! New VB-G RAM G Bill Will Burden States: CM Stalin Urges PM to Retain Gandhi’s Name in Job Scheme

MGNREGA திட்டத்தை இரத்து செய்யும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை (MGNREGA) இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக "வி பி ஜி ராம் ஜி" (VB-G RAM G) எனும் புதிய சட்டமுன்வடிவை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இ பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 2005-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில் ஆணிவேராகத் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், புதிய சட்டமுன்வடிவு மாநிலங்களின் நிதி உரிமைகளைப் பறிப்பதுடன், கூட்டாட்சி தத்துவத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கியுள்ள முதலமைச்சர், 2006 முதல் இத்திட்டம் சராசரியாக ஆண்டுக்கு 30 கோடி மனித-வேலைநாட்களை உருவாக்கி வருவதாகவும், குறிப்பாக 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் 40.87 கோடி மனிதநாட்கள் உருவாக்கப்பட்டு 13,400 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயம் பொய்க்கும் காலங்களிலும், பாசன வசதி இல்லாத பகுதிகளிலும் வாழும் பட்டியல் இன மக்கள் உள்ளிட்ட ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்திற்கு இத்திட்டமே வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. புதிய சட்டமுன்வடிவில் வேலைநாட்களை 125-ஆக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், திட்டத்தின் நிதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற பிற அம்சங்கள் மிகவும் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் முக்கிய ஆட்சேபனையாக, தேவை அடிப்படையிலான நிதியொதுக்கீட்டை மாற்றி, மத்திய அரசே மாநிலங்களுக்கான நிதி வரம்பை நிர்ணயிக்கும் முறை முன்மொழியப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டைப் போன்ற அதிக தேவை உள்ள மாநிலங்களில் உள்ளூர் மக்களின் தேவைகளைப் புறக்கணித்து, கிராமப்புறத் தொழிலாளர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், தற்போது திறனற்ற தொழிலாளர்களின் ஊதியத்தை முழுமையாக மத்திய அரசு ஏற்று வரும் நிலையில், புதிய சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 60:40 நிதிப் பங்கீட்டு முறை ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் மாநிலங்கள் மீது தேவையற்ற நிதிச்சுமையைச் சுமத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்டத்தின் அதிகாரப் பரவலாக்கத்தை மையப்படுத்துவதற்கும், மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதற்கும் முதலமைச்சர் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். கிராம ஊராட்சிகளின் அதிகாரத்தைக் குறைத்து, அடிமட்ட ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் இந்த சட்டமுன்வடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அதற்குப் பதிலாக, மாநிலங்களுடன் கலந்தாலோசனை செய்து, தற்போதுள்ள சட்டத்திலேயே வேலைநாட்களை உயர்த்துவது போன்ற ஆக்கப்பூர்வமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும், கிராமப்புற ஏழைகளின் நலன் காக்க தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk