2026-ன் முதல்வர் விஜய் தான்! ஈரோடு பொதுக்கூட்டத்தில் தவெக ஒருங்கிணைப்பாளர் உறுதி!
தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) 'மக்கள் சந்திப்பு' நிகழ்ச்சி இன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய தவெக-வின் நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவர்கள், "நாளை தமிழகத்தை ஆளப்போகும் புரட்சி தளபதி விஜய் தான்" என்று அதிரடியாக முழங்கினார். திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், "ஆண்டுக்கு ₹500 கோடி வருவாயைத் தரக்கூடிய தனது கலைப்பயணத்தை மக்கள் பணிக்காக வேண்டாம் என்று உதறிவிட்டு வந்திருக்கிறார் விஜய். நான் அன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பார்த்தேன்; இன்று விஜயைக் காண்கிறேன்" என்று கூறி அரங்கையே அதிரச் செய்தார்.
தலைவர் விஜய் அவர்கள் இன்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக விஜயமங்கலம் நோக்கிப் புறப்பட்ட அவருக்கு, வழிநெடுகிலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் பூத்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, கோவையிலிருந்து ஈரோடு வரை ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்து அணிவகுத்து வந்தது ஒரு மினியேச்சர் மாநாடு போலவே காட்சியளித்தது. 16 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மைதானத்திற்கு விஜய் வருகை தந்தபோது, தொண்டர்களின் ஆரவாரம் விண்ணைத் தொட்டது. தனது பிரத்யேகப் பிரச்சார வாகனத்தில் நின்றபடி மக்களைப் பார்த்து அவர் கையசைத்தபோது, மைதானமே குலுங்கியது.
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், "தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவர் தேவை என்ற மக்களின் நீண்ட காலக் கனவு இன்று நனவாகியுள்ளது. விஜய்யின் மனிதநேயமும், மக்கள் மீதான அவரது அக்கறையும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்திற்குப் பெரிய வெற்றியைத் தேடித்தரும். இன்று கூடியுள்ள இந்தக் கடல் போன்ற மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது, நாளை கோட்டையில் அமரப்போகும் முதல்வர் இவர்தான் என்ற வரலாறு இப்போதே எழுதப்பட்டுவிட்டது" என்று உறுதிபடத் தெரிவித்தார். கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், ஈரோடு மாவட்டமே இன்று தளபதி ஜுரத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பயணம் தமிழக அரசியலில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
