கரூர் துயரச் சம்பவம்: சட்டமன்றத்தில் முதலமைச்சர் Vs பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அனல் பறந்த விவாதம்! Karur Tragedy: BJP Leader Nainar Nagendran Blames Police Negligence in TN Assembly

அசம்பாவிதத்திற்குக் காவல்துறையின் கவனக்குறைவே காரணம் - நயினார் நாகேந்திரன்; அனைத்து உண்மைகளும் சிபிஐ விசாரணையில் வெளிவரும் - முதல்வர்!

சென்னை, அக்டோபர் 15: தமிழ்நாடு சட்டமன்றத்தின் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று (அக். 15), கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பாஜக மாநிலத் தலைவரும் சட்டமன்றக் குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரன் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதைத் தொடர்ந்து, விதி எண் 56-இன் கீழ் நயினார் நாகேந்திரன் இந்த விவகாரம் குறித்துக் கவனத்தை ஈர்த்துப் பேசினார்.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டுகள்:

கடந்த சில ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. ஆனால், ஆளுங்கட்சியினர் நீதிமன்றங்களை நாடுவதே இல்லை. த.வெ.க.வினர் கேட்ட ரவுண்டானா பகுதியை (லைட்ஹவுஸ் கார்னர்) கொடுத்திருந்தால், அங்கே நெரிசல் ஏற்பட்டிருக்காது.

பேசிக்கொண்டு இருக்கும்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுகிறது, செருப்பு வீச்சு நடைபெற்றுள்ளது. லத்தி சார்ஜ் நடைபெற்றிருப்பதாகக் கூடச் சொல்லப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டும் கூட்டத்திற்கு காவல்துறை போதுமான அளவு வருவதில்லை. இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் கூட ஒரு காவலர் கூட உள்ளே வரவில்லை. காவல்துறையின் கவனக் குறைவால் தான் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது என்பதைப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பதில்கள்:

நயினார் நாகேந்திரனின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாகப் பதிலளித்தார். அனுமதி குறித்து ஆதாரம் தேவை: கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் இடங்களில் உங்களுக்கு அனுமதி தரவில்லை என்பதை ஆதாரத்துடன் சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கிறேன். நயினார் நாகேந்திரன் சொன்னதுபோல லத்தி சார்ஜ் நடைபெறவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அங்கே திட்டமிட்டு யாரும் செருப்பு வீசவில்லை. குடிநீர் கேட்டுதான் செருப்பு வீசியிருப்பதாகக் கருதுகிறேன். அனைத்து உண்மைகளும் சிபிஐ விசாரணையில் வெளிவரும். திசைதிருப்பும் செயலில் ஈடுபட வேண்டாம்.

அமைச்சர் சிவசங்கரின் விமர்சனம்:

அமைச்சர் சிவசங்கர் எழுந்து, நயினார் நாகேந்திரன் பேசுவதைப் பார்க்கும்போது அவர் டிவியே பார்ப்பதில்லை என்று தெரிகிறது. அவர் சார்ந்த இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கரூர் மாவட்ட ஆட்சி நிர்வாகம் சரி இல்லை எனக் குற்றம் சாட்டுகிறார். அவருக்குப் போட்டியாக அண்ணன் நயினார் நாகேந்திரன் பேச முயற்சிக்கிறார் என்று தெரிகிறது என்றார்.

பாஜக வெளிநடப்பு:

இறுதியில், காவல்துறையின் கவனக் குறைவால் தான் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது என்பதைப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி பாஜக சார்பில் வெளிநடப்பை பதிவு செய்கிறோம் என்று நயினார் நாகேந்திரன் கூறி, பாஜக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk