சிவாஜி மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்திய பின் பேட்டி; அரசியலின் முதல் பாடத்தை விஜய் பெரிய விலை கொடுத்து வாங்கிவிட்டார் என்றும் கருத்து!
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டுச் சென்னை அடையாறு மணிமண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய நடிகர் எஸ்.வி. சேகர், கரூரில் நடந்த துயரச் சம்பவம் குறித்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.வி. சேகர், கரூர் விவகாரத்தில் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளின் செயல்பாடுகளைக் கண்டித்தார். பொறுப்பைத் தட்டிக்கழித்தல்: கரூர் விவகாரத்தில் 36 மணி நேரம் கழித்து வருத்தமான முகத்தோடு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் விஜய். அரசு செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்த பிறகு, தான் தப்பித்துக் கொள்வதற்கு அரசு மேல் பழிபோடுவது கோழைத்தனம் என்று அவர் நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
பத்தாயிரம் பேர்தான் வருவார்கள் என்று தவெக எழுதி கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் 25,000 பேர் வந்திருக்கிறார்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது தான் ஒரு நல்ல நிர்வாகத் திறன் உடையவருக்கு அழகு. போலீசார் மீது குற்றம் சொல்வது முறையல்ல. அரசியலின் முதல் பாடத்தை பெரிய விலை கொடுத்து வாங்கி விட்டார் விஜய்.
உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தகனம் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் நீங்கள் இரங்கல் தெரிவித்து என்ன பயன் கிடைக்கப்போகிறது? இனி போய் இரங்கல் தெரிவித்து என்ன பயன்?" என்று கேள்வியெழுப்பினார்.
விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, தமிழ்நாடு காவல்துறை அவரை கைது செய்யாது. அப்படிச் செய்தால் அதையும் வைத்து அரசியல் செய்வார் விஜய் என்றும் எஸ்.வி. சேகர் கருத்து தெரிவித்தார். முன்னதாக, நடிகர் சிவாஜி கணேசன் பற்றிப் பேசிய அவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இறப்பே கிடையாது. முத்தமிழறிஞர் தான் அவருக்குச் சிலை நிறுவியது என்றார்.
