தங்கத்தின் விலையில் பெரும் ஏற்ற இறக்கம்: இன்று காலையில் ரூ.1,320 குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.640 அதிகரிப்பு!
சென்னை, அக்டோபர் 10: கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தை எட்டி வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று (அக். 10, வெள்ளிக்கிழமை) காலையில் அதிரடியாகச் சரிந்தாலும், மாலையில் மீண்டும் கணிசமாக உயர்ந்து, நகை வாங்குவோருக்கு மீண்டும் ஒரு விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.640 அதிகரித்து விற்பனையானது, சந்தை வட்டாரங்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது.
சந்தை நிலவரப்படி, நேற்று (அக். 9) மாலை ரூ.91,400 என்ற புதிய உச்சத்தில் சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று காலையில் சவரன் விலை ரூ.1,320 குறைந்து ரூ.90,080-க்கு விற்பனையானது, நுகர்வோரிடையே சிறிது நிம்மதியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த சரிவுப் போக்கு நீடிக்கவில்லை. இன்று மாலையில் தங்கத்தின் விலையில் மீண்டும் அதிரடி ஏற்றம் காணப்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.90,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.11,340 ஆக விலை உயர்ந்துள்ளது.
சர்வதேசப் பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்த நிலையற்ற தன்மைக்கும் தொடர்ச்சியான விலை உயர்வுக்குக்கும் மூலகாரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தைப் போலவே, வெள்ளி விலையும் இன்று மாலையில் மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று காலையில் ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனையான வெள்ளி, மாலையில் ரூ.4,000 அதிகரித்து ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்துக்கு விற்பனையாகி வருகிறது. இதன்மூலம், ஒரு கிராம் வெள்ளி ரூ.184 என்ற புதிய விலையை எட்டியுள்ளது.