6 மாத இடைவெளி விதிப்படி கூட்டம்; எத்தனை நாட்கள் என அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்!
தமிழக சட்டப்பேரவை மீண்டும் அக்டோபர் 14ஆம் தேதி கூடும் எனச் சபாநாயகர் மு. அப்பாவு அறிவித்துள்ளார். 6 மாத கால இடைவெளிக்குப் பிறகு சட்டப்பேரவைக் கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், "சட்டப்பேரவை விதி 24 (1)-ன் கீழ் அக்டோபர் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்குச் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேரின் மறைவுக்கும், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படும். மேலும், 2025-2026ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கு நிதி அனுமதி அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.
முன்னர் நடந்த கூட்டத்தொடர்:
இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மார்ச் 14ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, துறை வாரியான மானியக்கோரிக்கை விவாதங்கள் ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெற்று, சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.