உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி; 95 கி.மீ. பைக் பயணம் செய்து உடலை வீசிய கொடூரம் அம்பலம்!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த 'சூட்கேஸ்' கொலை வழக்கு தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது காதலியைக் கொலை செய்து, உடலை சூட்கேஸில் அடைத்து, அதனோடு செல்ஃபி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்ததாலேயே கொலையாளி சிக்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நட்பு, காதல், மோதல்:
கான்பூரைச் சேர்ந்த அகன்ஷாவும், ஃபதேபூரைச் சேர்ந்த சூரஜும் ஒரு வருடத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகி, பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர். இருவரும் ஹனுமந்த் விஹாரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஒன்றாகத் தங்கியுள்ளனர். கடந்த ஜூலை 21ஆம் தேதி மாலை, சூரஜுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அகன்ஷாவுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சூரஜ், அகன்ஷாவின் கழுத்திலும் மார்பிலும் பலமுறை கத்தியால் குத்தி, பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
95 கி.மீ. பைக் பயணம்:
கொலைக்குப் பிறகு, உடலை அப்புறப்படுத்த தனது நண்பன் ஆஷிஷை அழைத்துள்ளார் சூரஜ். இருவரும் அகன்ஷாவின் உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து, பைக்கில் 95 கிலோமீட்டர் பயணித்து, உடலை யமுனா நதியில் வீசியுள்ளனர்.
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் சிக்கியது:
ஆகஸ்ட் 8ஆம் தேதி அகன்ஷாவின் தாயார் தனது மகளைக் காணவில்லை எனப் புகார் அளித்தார். எனினும், ஒரு மாதத்திற்கும் மேலாகப் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. செப்டம்பர் 16ஆம் தேதி, தாயார் நேரடியாக சூரஜ் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறிய புகாரின் பேரில், போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, சூரஜின் அழைப்பு விவரங்கள் மற்றும் மொபைல் இருப்பிடத்தின் அடிப்படையில் போலீசார் அவனையும் அவனது நண்பனையும் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையின் போதுதான், சூரஜ் செய்த மற்றொரு கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. கொலை செய்து உடலை சூட்கேஸில் அடைத்த பின்னர், அந்தச் சூட்கேசுடன் செல்ஃபி எடுத்து, அதைத் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது மொபைல் போனில் இருந்து புகைப்படங்களை மீட்டெடுத்த போலீசார், அவனது குற்றத்தை உறுதி செய்தனர்.
அகன்ஷா தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகவும், பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டியதாகவும் சூரஜ் கூறியுள்ளான். இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.