வெளிநாட்டு பயணி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை!
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மலேசியா நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 8 சவரன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து, அண்ணா சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசியக் குடிமகனான முகமது இஸ்கந்தர்ஷா பின் அப்துல்லா (எ) யுகேந்திரன், தனது உறவினரைச் சந்திப்பதற்காகச் சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து எல்.ஐ.சி. மெட்ரோ நிலையத்திற்குச் செல்லும்போது, அவரிடம் இருந்த 8 சவரன் தங்க வளையல்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, யுகேந்திரன் அண்ணா சாலை காவல் நிலையக் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.