சென்னை:
அதிமுகவில் ஒற்றைத்தலைமைக்காக ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் நான் தான் பொதுச் செயலாளர் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கும் சசிகலாவும் தற்போது இந்த பிரச்சனையில் இணைந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பேசிய அவர், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் தொண்டர்களுடன் செல்ல இருப்பதாகவும் அதிமுகவில் இருந்து யார் யாரையும் நீக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
பூந்தமல்லியில் பேசிய சசிகலா, அதிமுகவிற்கு ஒற்றை தலைமை கண்டிப்பாக வேண்டும். அதே சமயத்தில் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற தலைமையாக, தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற தலைமையாக இருக்க வேண்டும். தனக்கு ஆதரவாக சிலரை பேச வைத்து விட்டு நான் தான் தலைமை என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு வலுக்கட்டாயமாக நாற்காலியை பிடித்து கொண்டு இருந்தால் தலைவராக ஆகிவிட முடியாது என்றார்.
-Prabhanjani Saravanan