5 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த PFI அமைப்பின் முன்னாள் தலைவர் பிடிபட்டார்; தகவல் அளித்தவருக்கு 5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு திருபுவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில், நீண்ட தேடலுக்குப் பின் முக்கியக் குற்றவாளியான முகமது அலி ஜின்னாவை தேசியப் புலனாய்வு முகமை NIA அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
பாமக பிரமுகர் ராமலிங்கம், திருபுவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற மதமாற்ற நடவடிக்கைகளைக் கண்டித்துக் குரல் கொடுத்தவர் ஆவார். இதன் காரணமாக, 2019 பிப்ரவரி 5- ஆம் தேதி அவர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். என்.ஐ.ஏ. விசாரணையில், தேனி, திண்டுக்கல், கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளைச் சேர்ந்த 18 பேர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட முகமது அலி ஜின்னா, தடை செய்யப்பட்ட அமைப்பான PFI-யின் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் தலைவர் ஆவார். ராமலிங்கம் கொலையின் சதித் திட்டத்திலும், பிற குற்றவாளிகளை ஒருங்கிணைத்துத் திட்டமிட்டதிலும் இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.முன்னரே கைதானவர்கள்: ஏற்கெனவே, திருவிடைமருதூர் ரஹ்மான் சாதிக் மற்றும் அவரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், முகமது அலி ஜின்னா உட்பட 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
5ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த முகமது அலி ஜின்னா பற்றித் தகவல் தெரிவிப்போருக்குத் தலா ₹5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ.அறிவித்திருந்தது. தமிழகக் காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு ATS அளித்த தகவலின் பேரில் தேசியப் புலனாய்வு முகமை அமைப்பு இன்று முகமது அலி ஜின்னாவைக் கைது செய்தது.
மேலும், பல ஆண்டுகளாகத் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அஸ்மத் என்ற மற்றொரு நபரையும் என்.ஐ. கைது செய்தது.இந்தக் கொலைக்குப் பின்னணியில் உள்ள சதி மற்றும் அதன் விரிவான திட்டமிடல் குறித்து என்.ஐ.ஏ. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன்மூலம், வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த அனைத்து முக்கியக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
