நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் கதை இந்திய-கொரிய கலாச்சாரப் பிணைப்பை கொண்டாடும்: இயக்குநர் ஆர்.ஏ. கார்த்திக்!
சென்னை, அக்டோபர் 15: நடிகை பிரியங்கா மோகன் மற்றும் பார்க் ஹை-ஜின் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் கதையான 'மேட் இன் கொரியா', இந்திய-கொரிய கலாச்சாரப் பிணைப்பைப் பேசும் தனித்துவமான கதையாக உருவாகியுள்ளது. இந்தக் கதை குறித்துப் பேசிய பிரியங்கா மோகன், தன் கதாபாத்திரத்துடன் தனிப்பட்ட தொடர்பு உண்டு எனக் கூறியுள்ளார்.
'மேட் இன் கொரியா' கதைச் சுருக்கம்:
காதலனுடன் கொரியாவுக்குச் செல்லும் ஷென்பாவின் கனவு துரோகத்தால் சிதைகிறது. சியோலில் தனிமை, புதிய கலாச்சாரம் ஆகிய சவால்களுடன் போராடும் ஷென்பா, மெல்லத் தன்னைக் மீட்டெடுத்து, புதிய நண்பர்களுடன் வாழ்க்கைக்கான பிணைப்பை உருவாக்குகிறாள். இந்தக் கதையை ஆர்.ஏ. கார்த்திக் இயக்கியுள்ளார்.
இயக்குநர் ஆர்.ஏ. கார்த்திக்:
இயக்குநர் ஆர்.ஏ. கார்த்திக் 'மேட் இன் கொரியா' குறித்து கூறியதாவது, கொரிய கலாச்சாரத்தின் தாக்கம்: கொரிய கலாச்சாரம் கடந்த பத்தாண்டுகளில் இந்திய கலாச்சாரத்தை கணிசமாகப் பாதித்துள்ளது. இந்தக் கதையில் பணிபுரியத் தொடங்கும் வரை நான் கே-டிராமாவையோ, கே-பாப் இசையையோ கேட்டதில்லை.
இந்தக் கதைக்காக ரிசர்ச் செய்தபோது, கொரியா மற்றும் தமிழ் பாரம்பரியத்திற்கு இடையிலான ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் மற்றும் வரலாற்று ஒற்றுமைகளைக் கண்டறிய ஆர்வமாக இருந்தேன். என்னுடைய இந்த ஆர்வம் ஆழமான ஒரு கதையைச் சொல்லத் தூண்டியது. மேட் இன் கொரியா கதை நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியுடன் தனித்துவமான கலாச்சாரப் பின்னணியை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகை பிரியங்கா மோகன்:
பிரியங்கா மோகன் இந்தக் கதையில் நடித்த அனுபவம் குறித்துப் பேசியதாவது: இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான். கதை கேட்டவுடனே பிடித்துவிட்டது.
நான் கே-டிராமாஸை எப்போதும் விரும்பி பார்ப்பேன். அப்படி இருக்கையில், இந்திய-கொரிய கூட்டு முயற்சியான இந்தக் கதையின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பு எனக்கு உற்சாகமூட்டுவதாக இருந்தது.
நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்துடன் எனக்கு ஆழமான தனிப்பட்ட தொடர்பு இருந்தது. கார்த்திக் சார் கதை சொன்னபோதே எனக்கு உடனே பிடித்துவிட்டது. நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல்ஸின் இந்தப் பயணத்தில் நான் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது.