நாய் வளர்ப்பவர் கண்டுகொள்ளவில்லை எனக் காயமடைந்த பெண் கண்ணீர் மல்கக் கதறல்; காவல்துறை விசாரணை.
சென்னை, அக். 3: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில், 'பாக்ஸர்' வகையைச் சேர்ந்த நான்கு வளர்ப்பு நாய்கள் ஒரு பெண்ணைக் குதறியதில் அவரது காது கிழிந்து பலத்த காயமடைந்தார். நாய்களை வளர்ப்பவர் அதைக் கட்டுப்படுத்த முன்வரவில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்தது என்ன?
ராஜா அண்ணாமலைபுரம், குட்டி கிராமணி தெருவைச் சேர்ந்தவர் உஷா (45). வீட்டு வேலை செய்யும் இவர், வழக்கம் போல் வேலைக்காக நடந்து சென்றபோது, அவரது வீட்டின் அருகே இருந்த நான்கு வளர்ப்பு நாய்களில், ஒரு 'பாக்ஸர்' நாய் திடீரென உஷாவின் சேலையை இழுத்து அவரைக் கீழே தள்ளியது.
உடனே மற்ற மூன்று நாய்களும் சேர்ந்து உஷாவைக் குதறத் தொடங்கின. இதில் உஷாவின் காது கிழிந்ததுடன், தலை, முகம் உள்ளிட்ட பல இடங்களில் கீறல் காயங்கள் ஏற்பட்டன.
உரிமையாளர் மீது புகார்
உஷா அலறவே, அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து நாய்களின் பிடியிலிருந்து அவரைக் காப்பாற்றினர். இதையடுத்து, காயமடைந்த உஷா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
பாதிக்கப்பட்ட உஷா கண்ணீர் மல்கப் பேசுகையில், நாய்கள் என்னைக் குதறும்போது, அதன் உரிமையாளர் அதைக் கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ முன்வரவில்லை. எனக்குப் பயத்தில் உயிரே போய்விட்டது. தலையில் முடி சீவக்கூட முடியவில்லை. இந்த நாய் ஏற்கெனவே ஒருவரைக் கடித்தது. தற்போது என்னையும் வெறி கொண்டு குதறிவிட்டது," என்று வேதனையுடன் தெரிவித்தார். உடனடியாக மாநகராட்சி அந்த நாய்களைப் பிடித்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாயின் உரிமையாளரான குமார் என்பவரிடம் போலீசார் விரைவில் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மாநகராட்சி ஊழியர்களும் நாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
