'நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம்' - அவசர வழக்காக விசாரிக்கவும் மறுப்பு; நீதிபதிகள் கருத்து!
கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விவகாரத்தில், மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி நீதிபதிகள் அவற்றை தள்ளுபடி செய்தனர்.
வழக்கு விவரம்
கடந்த செப்டம்பர் 28, 2025 அன்று கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாகப் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதிகளின் கேள்விகள் மற்றும் உத்தரவு
இன்று விசாரணைக்கு வந்த இந்த மனு குறித்து நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சிபிஐ விசாரணை கோரிய மனுதாரர் பாதிக்கப்பட்டாரா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் விசாரணையை மாற்றலாம். விசாரணையின் ஆரம்ப நிலையிலேயே சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கேட்க முடியுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இறுதியில், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
